Thursday, November 5, 2009

தமிழ்மணம், தலைக்கறி, தனிமையின் இசை..





ஹூம்.. எத்தனை முறை மருத்துவர்களை சென்று பார்த்தாலும் இந்த தூக்கத்தில் உளறும் வியாதி மட்டும் நிற்கவே மாட்டேன் என்கிறது. எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் ஒன்றையே சொல்கிறார்கள்.

"நைட்டு ரொம்ப நேரம் கண்ணு முழிக்காதீங்க. ஒரு பத்து மணிக்கே தூங்கிடுங்க. மனச எப்பவுமே ரிலாக்ஸா வச்சுக்கங்க. இதுக்கு மருந்தெல்லாம் ஒண்ணியும் கெடயாது. அப்புறம் முக்கியமா ஆபீஸ்ல தூங்காதீங்க. பகல்ல முழிச்சிருந்தா தான் நைட்டு ஒழுங்கா தூக்கம் வரும்" என்று அரதப் பழசான ஜோக்கை வேறு சொல்லி எரிச்சலூட்டுகிறார்கள்.

நாம் என்ன அரசு அலுவலகத்திலா வேலை செய்கிறோம்? மென்பொருள் துறையில் பத்து மணிக்கே தூங்குவதாவது? சரி, எப்படியாவது செயல்படுத்தலாம் என்று முயற்சித்து ஒருநாள் இரவு ஒன்பதரை மணிக்கு கண்ணயர்ந்தேன். நள்ளிரவு சரியாக ஒரு மணியளவில் மொபைல் கதறத் துவங்கியது. ச்சே, என்ன கொடுமடா இது என்று போனை எடுத்தால் டீம் மேட் அமெரிக்காவிலிருந்து அலறுகிறான்.

"மச்சான், பயங்கர சாணிடா. உன்னோட மாட்யூல் கவுந்துருச்சு. கஸ்டமர் இன்னைக்கு இங்கயே என்னப் பொதச்சுருவான்னு நெனக்கிறேன். உடனே லாகின் பண்ணுடா"

ஏன் மொபைலை அணைத்து விட்டுத் தூங்கக் கூடாது என்று கேட்பீர்கள். அப்படி ஒரு நாள் செய்ததால்தான் நிறுவனமே அவர்கள் செலவில் ஒரு கனெக்ஷனையும் வாங்கிக் கொடுத்துவிட்டார்கள், எப்பொழுதும் ரீச்சபிளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு.

அதற்கப்புறம் எங்கே உறக்கம் வரும்? மீண்டும் அடுத்த நாள் முதல் வழக்கம் போல் கனவில் வரும் உருவங்களுடனெல்லாம் உளறத் துவங்கினேன்.

சரி இதை எதற்கு இங்கே சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது, அதற்குமுன் நான் கண்ட சில அனுபவங்களையும் உங்களிடம் சொல்கிறேன், அதன் பிறகுதான் அதன் விபரீதத்தை உணர்வீர்கள்.

சென்னையில் நைனா வீட்டில் பேச்சுலராக குடியிருந்தபோது நிகழ்ந்த சம்பவங்கள் இவை. நைனா வீட்டைப் பற்றி இன்னொரு இடுகையில் சொல்கிறேன் இப்போது இந்தக் கொடுமையை கேளுங்கள்.

நண்பன் ஒருவன் டொக்டெர் விஜயின் தீவிர ரசிகன். எனக்கும் அவரின் நடனம் பிடிக்கும் என்றாலும் ஒரு அளவு இருக்கிறதல்லவா? ஆனால் அவன் ஒரு ரசிகன் என்பதை விட வெறியன் என்றே சொல்ல வேண்டும். டொக்டரைப் போல நடனமாட வேண்டும் என்பதற்காக வாங்கிய சம்பளத்தை அப்படியே ஜான் ப்ரிட்டோ நடனப்பள்ளியில் மாதாமாதம் ஒன்றாம் தேதி கொண்டு போய் கொட்டினான்.

மாலை நேரமானால் அவன்தான் எங்களின் பொழுதுபோக்கு. ஏதேனும் ஒரு குத்துப் பாடலை டிவிடியில் போட்டுவிட்டு அவன் தலைவனைப் போலவே ஒரு ஸ்டெப் கூட மாறாமல் ஆட ஆரம்பித்து விடுவான். இதில் என்ன பிரச்சினை என்கிறீர்களா?

சில நாட்கள் நள்ளிரவில் திடீரென்று பாடிக் கொண்டே ஆட ஆரம்பித்து விடுவான். அவன் சுய நினைவோடுதான் ஆடுகிறான் என்று எண்ணி விடாதீர்கள்.

அவனின் நாராசமான குரலைக் கேட்டு திடுக்கிட்டு விழித்தால் படுக்கையிலேயே உட்கார்ந்து கொண்டே ஆடுவான். அது எப்படி முடியும் என்று கேட்காதீர்கள் அவன் உறக்கத்தில் உட்கார்ந்து கொண்டுதான் ஆடுவான். போதாக்குறைக்கு நடுநடுவே சில பன்ச் டயலாக்குகளையும் உதிர்ப்பான்.

"அரசு, வாழ்க்கை ஒரு வட்டம் மாதிரி, இங்க ஜெயிக்கறவன் தோப்பான் தோக்கறவன் ஜெயிப்பான், மலடா திருமல.." என்று தமிழ் சினிமாவின் தலையெழுத்து தத்துவங்களையும் உதிர்ப்பான்.

சரிதான், பாவம் தீவிர ரசிகன் என்று கருணை காட்டாதீர்கள். டொக்டரிடம் பிடிக்காத ஒரே விஷயம் அவரின் பன்ச் டயலாக்குகள்தான். திரையரங்கிலேயே தாங்க முடியாது. இங்கே நள்ளிரவில் ஒருவன் அதையே ஒப்பித்தால் எப்படி உங்களால் உறங்க முடியும்?

"டேய் உங்கூட ஒரே ரோதனையாப் போச்சுடா. ஏண்டா இப்படிக் கண்டபடி ஒளர்ற? பேசாமத் தூங்குடா" என்று சொன்னால்,

"நீ கூடத்தான் நேத்து ராத்திரி ஏதோ சரவணபவன்ல போயி ரெண்டு மட்டன் பிரியாணி பார்சல்னு ஒளறுன, நான் ஏதாவது சொன்னனா?" என்று என்னுடைய வீக் பாயின்டிலேயே கை வைப்பான்.

அன்றும் அப்படித்தான், ஏதோ "சனியன் சகடை, பட்டாசுப் பாண்டி, சிவகாசி" என்று உளறிக் கொண்டிருந்தவன் திடீரென்று குரலை மாற்றி,

"கொல்றாங்கப்பா, கொல்றாங்கப்பா... கைய எவனோ வெட்டிட்டாம்பா" என்று அழ ஆரம்பித்தான.

ஏற்கனவே இது போன்ற ஒரு நள்ளிரவு சம்பவத்தால் ஆடிப் போயிருந்த தமிழகத்தில் மீண்டும் அதே போன்ற ஒரு குரலைக் கேட்டால் எப்படி இருக்கும்?

அலறி அடித்து எழுந்து விளக்கைப் போட்டால், வலது கையால் இடது கையைப் பிடித்துக் கொண்டு "அய்யோ கைய வெட்டிட்டாங்கடா.. சனியன் சகட செஞ்சுட்டாண்டா" என்று உறக்கத்தில் அழுது கொண்டிருந்தான்.

அவனைப்பிடித்து உலுக்கி சுய உணர்வுக்கு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

என்ன நடந்தது என்று மெதுவான விசாரித்தால், பையன் ஒருக்களித்துப் படுத்திருந்தபோது, இடது கையை தலைக்கு அடியில் வைத்திருக்கிறான். நீண்ட நேரம் அப்படியே இருந்ததால் கையில் இரத்த ஓட்டம் தடைபட்டு மரத்துப் போயிருக்கிறது. அதே வேளையில் கனவில் டொக்டரை சனியன் சகடை அறிவாளோடு துரத்த, மரத்திருந்த கை வெட்டப்பட்டதாக அவன் எண்ண என எல்லாம் சேர்ந்து எங்கள் உறக்கத்துக்கு வேட்டு வைத்து விட்டது.

எல்லாம் சரி இப்போது உனக்கு என்ன பிரச்சினை என்று கேட்கிறீர்கள் தானே? இருங்கள் கொசுவத்தி இன்னும் மீதமிருக்கிறது.

திருமணமான புதிதில் பெங்களூருக்கு மனைவியை அழைத்து வந்திருந்த முதல் ஞாயிற்றுக்கிழமை. பேச்சுலர் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட சமையல் கலையை மனைவிக்கு காட்டி அசத்த வேண்டும் என்று முடிவு செய்து, அதிகாலையில் அவள் உறங்கிக் கொண்டிருக்க, நான் மட்டும் கறிக்கடைக்கு ஆட்டு இறைச்சி வாங்கச் சென்றேன்.

எப்போதுமே கிழட்டு ஆட்டுக்கறியைப் போட்டு ஏமாற்றி விடும் அண்ணாச்சி கடையில் அன்று சில குட்டி ஆடுகள் கட்டப் பட்டிருந்தன.

"என்ன அண்ணாச்சி குட்டிங்க எல்லாம் புதுசா இருக்கு?"

"என்ன பண்றது தம்பி கெழடுங்கள எவன் பாக்கறான்? நீ கூடப் பாரு குட்டிங்களப் பாத்ததும்தான் நம்ம ஏரியாவுக்கு வர்ற, இல்லைன்னா அங்கல்ல போயிடுவ?" என்று எதிரிலிருந்த கன்னடக் கடையை காண்பித்தார்.

"அத வுடுங்க அண்ணாச்சி இனிமே எப்பவுமே உங்ககிட்டதான் பிசினஸ்" என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக் குட்டியின் கால்கள், வயிறு, தலை என்று ஒவ்வொன்றாகப் பார்த்ததும் என்னுள்ளிருந்த சமையல்காரர் விழித்துக் கொண்டார்.

"அண்ணாச்சி, கால் ரெண்டையும் வெட்டி கருக்கி பாயா வெக்கற மாதிரி பக்குவமாக் குடுங்க. அப்படியே கொடல உருவி நல்லா சுத்தம் பண்ணி போட்டி வறுவலுக்கு பொடிப் பொடியா வெட்டி ஒரு அரைக் கிலோ குடுங்க"

குட்டியின் தலையை லேசாகத் தடவியபடி  "அண்ணாச்சி, தலையும் சூப்பரா இருக்கு. தலக்கறி ஒரு கிலோவும் கூடப் போட்டுருங்க" என்று சொல்லித் திரும்பியவன் முகத்தில் சடாரென ஒரு குத்து விழுந்தது.

என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள் சரமாரியாக உடலெங்கும் அடி விழுந்தது.

"அடப்பாவி மனுஷா என் வாழ்க்கையே பாழாப் போச்சே..! எவளோ ஒரு குட்டிக்காக என்னோட கால வெட்டி கொடல உருவற அளவுக்குப் போயிட்டியேடா படுபாவி"

விளக்கம் சொல்லவே விடாமல் படுக்கையிலேயே என்னை மொத்திய மனைவிக்கு "அய்யோ அது ஆட்டுக்குட்டி, பொண்ணு இல்ல" என்று புரிய வைப்பதற்குள் ரத்தம் சிந்த வேண்டியிருந்தது.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, திருமணத்தைக் காரணம் காட்டி அலுவலகத் தொல்லையிலிருந்து தப்பி, சில வருடங்களாக நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தேன்.

அப்புறம் என்ன ஒழுங்கா தூங்க வேண்டியதுதானே என்கிறீர்களா? கோபப்படாதீர்கள், இப்போது புதிதாக ஒரு பிரச்சினை முளைத்திருக்கிறது.

சில மாதங்கள் முன்பு பதிவு எழுத ஆரம்பித்தபோது அவ்வப்போது உளற ஆரம்பித்தவன், இந்த ஒரு வாரமாய் இரவில் தமிழ்மணம், தமிழிஷ், தனிமையின் இசை, தீராத பக்கங்கள், தேவியர் இல்லம், கசியும் மௌனம், வாழ்க்கை வாழ்வதற்கே என்று இரவெல்லாம் ஏதேதோ அவளுக்குத் தெரியாத தமிழ் படங்களின் பெயர்களை கண்டபடி உளறுகிறேனாம்.

எனவே நண்பர்களே, எந்த நொடியிலும் நான் அடி வாங்கி ஆஸ்பத்திரி செல்லும் அபாயமிருக்கிறது. எனக்காக உங்கள் சாமிகளிடமெல்லாம் வேண்டிக் கொள்ளுங்கள்.

26 comments:

  1. பாத்துங்க நாகா... டெரரான பிளாக் நேமேல்லாம் இருக்கு. படிச்சி உலர ஆரம்பிச்சிட்டீங்கன்னா இன்னும் சீரியசாயிடும்...

    பிரபாகர்.

    ReplyDelete
  2. முடியல .. அந்த ஆடு கனவில் வந்த சீன் ல சிரிச்சிட்டேன்.. அப்ப கடைக்கே போகலையா...:))))

    ReplyDelete
  3. கனவுகளே.., அப்படின்னு கூப்பிடுறேன்னு சுருக்கமாச் சொல்லிடுங்க

    ReplyDelete
  4. கலக்கல் :))))

    ஆஹா காலையிலயே கடைக்கு போயி கலக்கியிருப்பீங்கன்னு ரொம்ப ஆர்வமா வந்தா இப்படி அடி வாங்குனதை சொல்றீங்களே பாஸ் :))))

    ReplyDelete
  5. //தனிமையின் இசை,// இதை தூக்கத்தில் சொல்லும் அளவுக்கு போயாச்சா? அப்ப அடிப்பதில் தப்பே இல்லை :)

    ReplyDelete
  6. கலக்கல் நாகா. ஆடு மேட்டர் சூப்பர். என்னைக்காவது “குப்பைத்தொட்டி”னு உளறன ஞாபகம் இருக்கா?

    ReplyDelete
  7. //னிமையின் இசை, தீராத பக்கங்கள், தேவியர் இல்லம், கசியும் மௌனம், வாழ்க்கை வாழ்வதற்கே என்று இரவெல்லாம் ஏதேதோ அவளுக்குத் தெரியாத தமிழ் படங்களின் பெயர்களை கண்டபடி உளறுகிறேனாம்.//

    பேரு எல்லாமே தனியா சொல்லிப்பார்த்தா ஒரு மார்க்கமாத்தான் இருக்குதுவே :)

    ReplyDelete
  8. எங்க நட்சத்திரம் நாகா எப்பூடி..?
    மின்னுது... மின்னுது... தமிழிஷ் வரைக்கும் மின்னுது!!

    ReplyDelete
  9. எங்க நட்சத்திரம் நாகா எப்பூடி..?
    மின்னுது... மின்னுது... தமிழிஷ் வரைக்கும் மின்னுது!!

    ReplyDelete
  10. ஆகா.... நாங்க எதுக்கும் வேண்டிக்கிறோம்! :-0)

    ReplyDelete
  11. இதுக்குதான் பிளாக் அதிகம் படிக்ககூடாதுனு சொல்றது

    நண்பன் ஒருவர் வேலையில்லாமல் கம்ப்யூட்டர்லே சோலிடர் விளையாண்டு தூக்கத்தில் ஹார்ட்டின், ஆஸ் வருமாம்

    கவனம் தேவை தல, அடி வாங்கினால் ராத்திரிலே ஹாஸ்பிடல் திறந்திருக்காது

    ReplyDelete
  12. தொங்க விடாம போனாங்களே நாகா. யூ ஆர் லக்கி:))

    ReplyDelete
  13. "கசியும் மௌனம்" படிக்காதீங்கனா கேக்குறீங்களா...

    இப்பிடித்தானுங்க நேத்து அந்தாளு சன் டிவி, நரமாமிசம்னு எழுதியிருக்காரு... நான் வேற சும்மாயிருக்காமா அத படிச்சு வெடிய வெடிய தூக்கமேயில்லீங்க.....

    நீங்க எதுக்கும் "வாழ்க்கை வாழ்வதற்கே " படிங்க, அவரு ஆடு, கோழின்னு தெனம் ஒன்னா அடிச்சிக்கிட்டிருக்காரு

    ReplyDelete
  14. அண்ணாவ் நாங்க நம்பவே மாட்டோம்ங்ண்ணா?

    நீங்கள் ஊத்த வாயோட வேலையில் இருந்தாலும் சரி, உளறல் தூக்க கலக்த்ல இருந்தாலும் சரி ஆப்பரசன் கொடுத்த அவார்டு பெற்ற எனக்கே ரிவார்டு மாதிரி இருக்கும் போது லாகின் செய்து மொங்கி விட மாட்டீங்களாண்ணா.

    அது ஒங்க திறமண்ணா திறம.

    ReplyDelete
  15. //தேதோ அவளுக்குத் தெரியாத தமிழ் படங்களின் பெயர்களை கண்டபடி உளறுகிறேனாம்.//


    இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.......
    ம்ம்....நடக்கட்டும் நடக்கட்டும்

    ReplyDelete
  16. செம காமெடி போங்க..நல்லா இருக்கு..;)

    ReplyDelete
  17. சரியான கலக்கல் நாகா.... எதுக்கும் சப்பாத்திக்கட்டை எல்லாம் மறைச்சு வையுங்க :)

    ReplyDelete
  18. நன்றி ப்ரபா, முத்துலட்சுமி, சுரேஷ்,ஆயில்யன்..

    ReplyDelete
  19. வாங்க குசும்ப்ஸ், குட்டி குசும்ப்ஸ் நலமா?

    ReplyDelete
  20. ஆதவா, குப்பைத்தொட்டின்னு ஒளறியிருந்தேன்னா, நெலம இன்னும் மோசமா போயிருக்குமே..

    ReplyDelete
  21. நன்றி பழமை அண்ணே, கலை மச்சான், அபு நண்பா, வானம்பாடிகள் ஐயா

    ReplyDelete
  22. கதிர், உங்க அகோரியப் படிச்சதுலருந்து தூங்கவே முடியல, தூங்கினாத்தானே உளற்றதுக்கு..

    ReplyDelete
  23. நன்றி சென்ஷி, நேத்து சாயந்திரம் என்ன டரியலாக்குனது பத்தாதா?

    நன்றி ஜோதிஜி, வினோத், ஆரூரன் விஸ்வனாதன், செந்தில்

    ReplyDelete
  24. கவலை வேண்டாம் தல..நாளை உங்களுக்கு கூட்டு பிராத்தனை செய்துவிடுகிறோம் ;))

    ReplyDelete

எரிமலையும் மனக்குமுறலும்

ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய...