Wednesday, November 25, 2009

சா(வு)க் கடலை நோக்கி..!




இறந்த கடல் அல்லது செத்த கடல் அல்லது சாக்கடல் என்றழைக்கப்படும் இந்த ஏரிதான் இஸ்ரேலையும் (பாலஸ்தீனம் மேற்குக் கரை) ஜோர்டானையும் பிரிக்கிறது. பள்ளி நாட்களில் புவியியல் புத்தகங்களில் படித்திருப்பீர்கள், உலகின் மிகவும் தாழ்வான இடமான இங்குள்ள நீரின் உவர்ப்பால் எந்த உயிரினமும் வாழ முடியாது, இதன் அடர்த்தியால் எவராலும் இதனுள் மூழ்க முடியாது. மனித வாழ்வின் மூன்று மிகப்பெரிய மதங்களின் வரலாற்றில் இந்த ஏரிக்கும் இதன் ஒரே நீர் வரத்தான ஜோர்டான் நதிக்கும் மிக முக்கியப் பங்குண்டு.

காலை ஏழு மணிக்குத்தான் விமானம் என்றாலும் நேரத்தில் எழ முடியுமா என்று சிறிது சந்தேகமாகத்தான் இருந்தது. இரண்டு காரணங்கள் - கடந்த சில மாதங்களாகவே 'வொர்க் ஃப்ரம் ஹோம்' என்பதால் காலை பத்து மணிக்கு எழுந்து ராக்கோழியாக இரவு ஒரு மணி வரை விழித்துப் பழகி விட்டது. இரண்டாவது காரணம் அம்மணியை நேற்று முந்தினம்தான் ஊருக்கு அனுப்பியிருந்தேன்.

எதிர்பார்த்தது போலவே நான்கு மணியிலிருந்து கூவிக் கொண்டிருந்த அலாரத்தை ஸ்னூஸ் போட்டு போட்டு திடீரென எதற்காக அடிக்கிறது என்று யோசித்த போது மணி ஐந்தரை. அவசரமாக காலைக் கடன்களை முடித்து ஐந்து ஐம்பதுக்கு வெளியே வந்து டாக்சியைப் பிடித்தேன். நல்ல வேளையாக அம்மணி இரண்டு நாட்களுக்கு முன்னமே எச்சரித்து பெட்டியை எல்லாம் பேக் செய்திருந்ததால் அந்த வேலை மிச்சம். போக்குவரத்து குறைவான அதிகாலையில் துபாய் இன்னமும் அழகாக இருந்தது, ஆனால் நானிருந்த பரபரப்பில் ரசிக்க நேரமில்லை.

பத்தானிய டாக்சி டிரைவர் நூற்றி நாற்பதில் அழுத்தி பத்தே நிமிடங்களில் துபாய் விமான நிலையத்தின் முதல் டெர்மினலில் விட்டார்.

செக்யூரிட்டி செக்கிங் முடிந்து வரும்போது ராயல் ஜோர்டான் விமான கவுன்டரில் கடையை மூடுவது தூரத்திலேயே தெரிந்தது. ஓடோடிச் சென்று பெட்டியை எடை இயந்திரத்தில் வைத்து பாஸ்போர்ட்டை நீட்டினேன்.

"ஓ நோ.. வி ஆர் க்ளோஸிங். ஒய் ஆர் யு லேட்" என்று கொஞ்சியது கவுன்டரிலிருந்த பாப்பா.

"ஹெவி ட்ராஃபிக்" அமீரகத்தில் எங்கு செல்ல தாமதமாகி விட்டாலும் சொல்லும் காரணம்.

"இன் த மார்னிங்?" என்று முறைத்துக் கொண்டே "யூ ஆர் லக்கி டுடே ஃப்ளைட் இஸ் தர்ட்டி மினிட்ஸ் டிலேய்ட்" என்றாள்

ஆஹா, பந்து இப்ப நம்ம பக்கம். "யுவர் ஏர்லைன்ஸ் இஸ் ஆல்வேஸ் லேட்" என்று சிரித்தேன். என்ன நக்கலா என்பது போல் அவளும் சிரித்துக் கொண்டே ஜன்னல் சீட்டில் துண்டு போட்டுக் கொடுத்தாள்.

மேலும் ஒரு அரை மணி நேரம் தாமதமாக எட்டு மணிக்கு விமானம் கிளம்பியது. வார நாளாதலால் உள்ளே வெகு சில பயணிகளே இருந்தனர். பொழுதை ஓட்ட, எதிரிலிருந்த சின்னத்திரையில் இருந்த ஆங்கிலப் படங்களை தேடினேன். க்ளாஸிக்கல் பிரிவில் "லாரன்ஸ் ஆஃப் அரேபியா" இருந்தது.

பலமுறை இத்திரைப்படத்தை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், விகடனில் செழியன் எழுதிய உலக சினிமா தொடரிலும் இதன் விமர்சனத்தை படித்திருக்கிறேன். அத்துடன் விமானம் செல்லும் பாதையும் அரபிப் படைகள் பயணம் செய்ததும் ஒன்றே என்பதால் ஆர்வமாகப் பார்க்கத் துவங்கினேன்.



செல்லும் வழியில்

அமீரகத்திலிருந்து வட மேற்கில் மிக நீண்ட பாலைவனம், அதன் நடுவே செல்லும் ரயில் பாதை, வாடி ரம் (Wadi Rum) மலைத் தொடர்கள் என வரலாற்றின் முக்கிய இடங்களை மேலிருந்து காணக் காண மகிழ்ச்சியும் சிலிர்ப்பும் உள்ளத்தில் மாறி மாறிக் குடிகொண்டது.

நான்கு மணி நேரப் பயணத்தில் மூன்று மணி நேரம் லாரன்ஸுடனே ஜோர்டானின் ஒரே கடற்கரை நகரமான அகாபாவை கைப்பற்ற பாலைவனத்தில் நெடும் பயணம் மேற்கொண்டேன். உள்ளூர் நேரப்படி சரியாக பத்து மணிக்கு அம்மானின் "ராணி ஆலியா" விமான நிலையத்தில் தரை இறங்கியது எங்கள் விமானம்.

கடவுச்சீட்டு கன்ட்ரோல் அதிகாரி இந்தியரா? இங்கு என்ன வேலை? எங்கு தங்குகிறீர்கள்? எத்தனை நாட்கள்? என்று குடைந்து விட்டு "அருகிலிருக்கும் காவல் நிலையத்தை ஒரு வாரத்துக்குள் தொடர்பு கொள்ளவும்" என சீல் வைத்துக் கொடுத்தார்.

"ஹூம் நம்ம மூஞ்சியப் பாத்தாலே எல்லோருக்கும் சந்தேகம் வந்துருமே" என்று எண்ணியபடியே வெளியே வந்து விமான நிலைய டாக்ஸியைப் பிடித்தேன்.


டிரைவர் ஒரு பாலஸ்தீனியர், குதறிக் குதறி ஆங்கிலம் பேசினார். மெதுவாக அவரிடம் "சாவப்போக சாரி சாவுக்கடலுக்குப் போக எவ்வளோ நைனா?" என்று கேட்டேன்.


'Dead Sea'யின் முன்பு


"போக வர நூறு ஜே.டி. அங்கே ஒரு இரண்டு மணி நேரம் வெயிட்டிங்குடன் சேர்த்து" என்றார்

கணக்குப் போட்டுப் பார்த்தால் இந்திய ரூபாயில் ஏழாயிரத்து ஐநூறுக்கு அருகில் வந்து தலையை லேசாக சுற்றியது. பேரம் பேசுமாறு ஏற்கனவே பலரும் கூறியிருந்ததால் ஐம்பதிலிருந்து ஆரம்பித்தேன்.

அவரும் உடன் பல டிஸ்கவுன்டுகளை அள்ளி விட்டார். டெட் ஸீ உடன் ஜேர்டான் நதியையும் காட்டுகிறேன், ஏசுநாதர் ஞானஸ்நானம் (Place where Jesus baptized by John on the banks of Jordan River) பெற்ற இடத்தையும் காட்டுகிறேன் என்றார்.

அப்படியென்றால் எழுபது என்றேன். சரி, செய்ன்ட் மோசஸின் நினைவிடமுள்ள நீபோ மலைக்கும் (Mount Nebo) அழைத்துச் செல்கிறேன், நூறு கொடுங்கள் என்றார்.

ஒரே நாளில் இத்தனை இடமா என்று பேராசையில் எண்பதுக்கு பேரம் படிந்ததும் "நேராக ஹோட்டலுக்கு செல்லுங்கள் மூட்டையை அங்கே வைத்துவிட்டு பத்தே நிமிடத்தில் கிளம்பிவிடலாம்" என்றேன்

அறையில் எல்லாவற்றையும் எறிந்து விட்டு அலுவலகத்துக்கு அழைத்து தகவல் சொல்லியாகி விட்டது. திட்டப்படி மறுநாள்தான் மீட்டிங் என்பதால் வெளியே சுற்றுவதற்காகவே இன்றைய காலை விமானத்தை பதிவு செய்திருந்தேன்.

மணி பதினொன்றரை ஆகிவிட்டிருந்தது. ஒரு டவலுடன் காமிராவையும் பைனாகுலரையும் எடுத்துக் கொண்டு அவசரமாக கீழே வந்து ரிசப்ஷனில் "டெட் சீ செல்கிறேன்" என்று சொன்னதும் "பாஸ்போர்டை மறக்காமல் எடுத்து செல்லுங்கள், அங்கங்கு ராணுவ சோதனையகங்கள் இருக்கும்" என்று கிலி ஏற்படுத்தினார்கள்.




சாவுக்கடலில் மிதக்கும்போது

1994ல் இஸ்ரேலுக்கும் ஜோர்டானுக்கும் ஏற்பட்ட அமைதி உடன்படிக்கையைத் தொடர்ந்து தற்போது எல்லையில் அவ்வளவு பதற்றமில்லை என்றாலும் ராணுவ கேம்ப்கள் அனைத்தும் அந்த வழியில்தான் இருக்கிறது. எனவே தனியே செல்வதற்கு சற்றே அச்சமாக இருந்தாலும் இன்னும் சில மணி நேரங்களில் காணப் போகும் இடங்களின் புவியியல் அதிசயம் மற்றும் சரித்திர முக்கியத்துவம் ஆகியவற்றை எண்ணியபடி உற்சாகமாக கிளம்பினேன்.

30 comments:

  1. மிகவும் மகிழ்ச்சி.

    போக விருப்பமில்லை என்றீர்கள்.

    ஒரு இடுகை. யோசித்துப் பார்க்காத சமாச்சாரங்கள். வரலாற்றுத் தகவல்கள், தனி மனித சந்தோசம். சாவுக்கடல். பெயரைப் படிக்கும் போதே ஏதோ ஒரு வித்யாச உணர்வு.

    செல்லும் பாதை எல்லாம் வரவு.
    சென்ற பிறகு அனுபவம்.
    நடையும் நன்றாக இருக்கிறது. போட்டுருக்கும் உடையும்.

    அமெரிக்கா, ஐரோப்பா போல் இது போன்ற நாடுகள் நீங்கள் சுந்தர் போன்றவர்கள் இடுகை மூலமாக என்னைப் போனறவர்கள் தெரிவித்தால் தான் உண்டு.

    அம்மிணி இல்லாத வீட்டில் உங்கள் ராஜ்யம் எப்படி இருக்கும் என்று கற்பனையில்?

    ReplyDelete
  2. அழகான புகைப்படங்கள். சுவாரசியமான பகிர்வு நாகா.

    ReplyDelete
  3. ஆரம்பமே ரொம்ப சுவாரசியம் ..... கூட வருகிறேன் எழுதுங்கள். ( இன்னமும் கணக்கு இந்திய ரூபாய்க்கு தானா!!!!!!????)

    ReplyDelete
  4. அருமை நண்பர் நாகா,
    நல்ல பயணக்கட்டுரை, அவசியம் தொடர்ந்து எழுதவும், படிக்க ஆவல். சென்னை வந்தவுடன் அழைக்கவும், சந்திப்போம்.

    ReplyDelete
  5. நல்லா இருந்தது நாகா.. :))

    ஆனா துபாய் போக்குவரத்து நெரிசல் பொய்யை ரசித்தேன் ;)

    ReplyDelete
  6. நல்ல பயணக்கட்டுரை தல. வரலாற்றோடு தொடர்பு படுத்தி சொல்லியது சுவாரஸியமாக இருந்தது. தொடருங்கள். படிக்க காத்திருக்கிறேன் :)

    ReplyDelete
  7. சுவாரசியமான பதிவு.....

    ReplyDelete
  8. அருமையான பதிவு நாகா

    ReplyDelete
  9. அருமையா இருக்கு தல...

    பயணக்கட்டுரை சூப்பர்.

    ReplyDelete
  10. அட அங்கிருந்துதான் புனித நீர் பற்றி சொன்னீங்களா!!???

    ReplyDelete
  11. கிளம்பிட்டாருய்யா... நல்லாயிரு! நல்லாவும் இருக்கு!!

    ReplyDelete
  12. பயணக்கட்டுரை பலே :)

    ReplyDelete
  13. அட.... நம்ம லிஸ்ட்ல இருக்கற இடம்....

    அது பொதுவா "சாக்கடல்"னுதானே சொல்லுவாங்க.... சாவுக்கடல்னு இல்லையே?

    ReplyDelete
  14. தெளிவான ரசிக்கும்படியான பிசிறில்லாத நடை…

    ReplyDelete
  15. சுறு சுறுப்பான நடை நாகா..சுவராஸ்யம்.

    ReplyDelete
  16. அருமை..என்ஜாய் பண்ணி இருக்கீங்க நாகா..தொடருங்கள்..:)

    ReplyDelete
  17. வாங்க ஜோதிஜி, வானம்பாடிகள் ஐயா நன்றி..

    ReplyDelete
  18. //அது ஒரு கனாக் காலம் said...
    ஆரம்பமே ரொம்ப சுவாரசியம் ..... கூட வருகிறேன் எழுதுங்கள். ( இன்னமும் கணக்கு இந்திய ரூபாய்க்கு தானா!!!!!!????//

    வாங்க சுந்தர் சார். என்ன பண்ணறது சார் அம்மான்லருந்து அரை மணி நேர தூரம்தான். சாயந்திரம் வந்தப்புறம்தான் எல்லோரும் சொன்னாங்க அம்பது தினார்தான் எல்லோத்துக்கும் சேத்து வாங்குவாங்களாம். நல்லா நாமம் போட்டான் எனக்கு..

    ReplyDelete
  19. வாங்க கார்த்தி, நிச்சயம் சந்திப்போம். ஷண்முகப்ரியன் சாரையும் சந்திக்கணும். நீங்களும் கூட வாங்க..

    ReplyDelete
  20. வாங்க நன்றி செந்தில், சங்கவி, ஆதவன்..

    ReplyDelete
  21. நன்றி ப்ரதீப், கதிர் - ஆமாங்க அங்கிருந்துதான் சொன்னேன்.

    ReplyDelete
  22. வருகைக்கு நன்றி ப்ளாக் பாண்டி, அனானி

    ReplyDelete
  23. //Mahesh said...
    அட.... நம்ம லிஸ்ட்ல இருக்கற இடம்....

    அது பொதுவா "சாக்கடல்"னுதானே சொல்லுவாங்க.... சாவுக்கடல்னு இல்லையே?//

    ஆமாங்க மகேஷ் சாக்கடல்ங்கறது எழுதும்போது சாக்கடை மாதிரி இருந்தது. ஒரு டெரரா இருக்கட்டுமேன்னுதான் சாவுக்கடல்னு வெச்சேன்.

    ReplyDelete
  24. நன்றி ராஜாராம், நசரேயன், வினோத் கௌதம்

    ReplyDelete
  25. Beatuiful log. there are 2 things of my interest in this blog post (will it accept a english comment). let me try and continue :(

    ReplyDelete
  26. Its beautiful. when i see a blog post which i follow, i keep it open or send a mail to remind me later at home to read it. it was so interesting that i continued reading in the office before starting to work. it has 2 things of my insterest - one i love travelogues. 2nd, as can be seen in the first comment, I get excited by hearing the name, history, stories or whatever of middleeast. moreover, i read the book "Nilamellam ratham", just last year. that too in long sitting to complete in a week. it is interesting, beautiful with funny usage of language, which is more important in such blogs. my interest and involvement kept increasing till i found the blog is abrupt and to be continued, i guess. quick boss. i cant wait.

    Oh, i forgot. This is Thiagu, boss.

    ReplyDelete
  27. Hi Naga,

    Its interesting. what happened next? Awaiting for your next post

    Murugesh - Coimbatore

    ReplyDelete
  28. ☀நான் ஆதவன்☀ said...
    நல்ல பயணக்கட்டுரை தல. வரலாற்றோடு தொடர்பு படுத்தி சொல்லியது சுவாரஸியமாக இருந்தது. தொடருங்கள். படிக்க காத்திருக்கிறேன் :)
    //
    ரிப்பீட்டு.!

    ReplyDelete
  29. Hi
    good post. Were u on job? Is traveling to Israel for the sake for travelling justifiable?

    ReplyDelete

எரிமலையும் மனக்குமுறலும்

ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய...