Monday, November 30, 2009

இந்தியாவில் சில நாட்கள்..




நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் சில தினங்கள் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, வழக்கம் போல் பல நிபந்தனைகளுடன். வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய வேண்டும், இருபது முப்பது பேர்களை இன்டர்வியூ செய்து இரண்டு அல்லது மூன்று பேர்களை எங்கள் அணிக்கு தேர்வு செய்ய வேண்டும், ஏதேனும் பிரச்சினை என்றால் எந்த நேரமும் லாகின் செய்ய வேண்டும் போன்று பல விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் வர முடிந்தது.

ரிலையன்ஸ் டேட்டா கார்ட் வாங்கலாமென்று இருக்கிறேன். யாராவது உபயோகித்துக் கொண்டிருந்தால் அதன் பெர்ஃபார்மன்ஸ், பேக்கேஜ்கள் பற்றி தெரிவியுங்கள். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு திருமணங்கள், உறவினர் வீடுகள் என்று இங்குமங்கும் அலைய வேண்டியுள்ளதால் அதுவரை, அவ்வப்போது நண்பர் உடுமலை டாட் காம் சிதம்பரம் அவர்களின் புத்தகக் கடையில் இருந்தபடி இணையத் தொடர்பிலிருக்க முயற்சிக்கிறேன்.

பதிவர்களையும், வாசகர்களையும்(???) சந்திக்க மிகவும் ஆவலாயிருப்பதால், வந்ததும் நேற்று முதல் வேலையாக ஒரு ஏர்செல் அலைபேசி எண்ணை எடுத்து விட்டேன் (+91)-9715106693.  முடிந்தால் அழையுங்கள்.


சென்னையில் பதிவர்கள் சிலரை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தேன், நண்பர் ஜோ, கார்த்திகேயன் மற்றும் ஷண்முகப்ரியன் ஐயா ஆகியோர் மட்டுமே சம்மதித்திருக்கின்றனர். நண்பர் ப்ரபாகர் பல பிரபல பதிவர்களையும் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தருவதாக வாக்களித்துள்ளதால் அவர்களையும் சந்திப்பதில் ஏதும் பிரச்சினை இருக்காது என்று எண்ணுகிறேன்.

கோவை, பொள்ளாச்சி, உடுமலை என்று வந்த வழியெங்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது - மீண்டும் தொழில்கள களைகட்டி விட்டனவா என்று கேட்டால், முகூர்த்த நாள் என்றனர். தோட்டங்களில் வேலை செய்ய ஆட்களே கிடைப்பதில்லையாம், நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினமும் ஒரு மணி நேரம் வேலை செய்தால் போதும் நூறு ரூபாய் சம்பளமாம் எனவே யாரும் எட்டு மணி நேரம் காட்டில் வெயிலில் வேலை செய்யத் தயாராய் இல்லை. திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் பலவும் உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை வரை வந்து ஆட்களை பஸ்களில் ஏற்றிச் சென்று Pick and Drop கொடுக்கிறார்களாம்.

இளைஞர்கள் கைகளிலெல்லாம் சைனா மொபைல் போன்கள், ஊரில் திரும்பிய பக்கமெல்லாம் இலவச திட்டங்கள் என மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவே தெரிகிறது. எனவே நண்பர்களே, நீங்களும் மகிழ்ச்சியாக இருந்தால் என்னை அழைக்கும் முன்னர் எதற்கும் ஒரு முறை யோசியுங்கள் :)

Wednesday, November 25, 2009

சா(வு)க் கடலை நோக்கி..!




இறந்த கடல் அல்லது செத்த கடல் அல்லது சாக்கடல் என்றழைக்கப்படும் இந்த ஏரிதான் இஸ்ரேலையும் (பாலஸ்தீனம் மேற்குக் கரை) ஜோர்டானையும் பிரிக்கிறது. பள்ளி நாட்களில் புவியியல் புத்தகங்களில் படித்திருப்பீர்கள், உலகின் மிகவும் தாழ்வான இடமான இங்குள்ள நீரின் உவர்ப்பால் எந்த உயிரினமும் வாழ முடியாது, இதன் அடர்த்தியால் எவராலும் இதனுள் மூழ்க முடியாது. மனித வாழ்வின் மூன்று மிகப்பெரிய மதங்களின் வரலாற்றில் இந்த ஏரிக்கும் இதன் ஒரே நீர் வரத்தான ஜோர்டான் நதிக்கும் மிக முக்கியப் பங்குண்டு.

காலை ஏழு மணிக்குத்தான் விமானம் என்றாலும் நேரத்தில் எழ முடியுமா என்று சிறிது சந்தேகமாகத்தான் இருந்தது. இரண்டு காரணங்கள் - கடந்த சில மாதங்களாகவே 'வொர்க் ஃப்ரம் ஹோம்' என்பதால் காலை பத்து மணிக்கு எழுந்து ராக்கோழியாக இரவு ஒரு மணி வரை விழித்துப் பழகி விட்டது. இரண்டாவது காரணம் அம்மணியை நேற்று முந்தினம்தான் ஊருக்கு அனுப்பியிருந்தேன்.

எதிர்பார்த்தது போலவே நான்கு மணியிலிருந்து கூவிக் கொண்டிருந்த அலாரத்தை ஸ்னூஸ் போட்டு போட்டு திடீரென எதற்காக அடிக்கிறது என்று யோசித்த போது மணி ஐந்தரை. அவசரமாக காலைக் கடன்களை முடித்து ஐந்து ஐம்பதுக்கு வெளியே வந்து டாக்சியைப் பிடித்தேன். நல்ல வேளையாக அம்மணி இரண்டு நாட்களுக்கு முன்னமே எச்சரித்து பெட்டியை எல்லாம் பேக் செய்திருந்ததால் அந்த வேலை மிச்சம். போக்குவரத்து குறைவான அதிகாலையில் துபாய் இன்னமும் அழகாக இருந்தது, ஆனால் நானிருந்த பரபரப்பில் ரசிக்க நேரமில்லை.

பத்தானிய டாக்சி டிரைவர் நூற்றி நாற்பதில் அழுத்தி பத்தே நிமிடங்களில் துபாய் விமான நிலையத்தின் முதல் டெர்மினலில் விட்டார்.

செக்யூரிட்டி செக்கிங் முடிந்து வரும்போது ராயல் ஜோர்டான் விமான கவுன்டரில் கடையை மூடுவது தூரத்திலேயே தெரிந்தது. ஓடோடிச் சென்று பெட்டியை எடை இயந்திரத்தில் வைத்து பாஸ்போர்ட்டை நீட்டினேன்.

"ஓ நோ.. வி ஆர் க்ளோஸிங். ஒய் ஆர் யு லேட்" என்று கொஞ்சியது கவுன்டரிலிருந்த பாப்பா.

"ஹெவி ட்ராஃபிக்" அமீரகத்தில் எங்கு செல்ல தாமதமாகி விட்டாலும் சொல்லும் காரணம்.

"இன் த மார்னிங்?" என்று முறைத்துக் கொண்டே "யூ ஆர் லக்கி டுடே ஃப்ளைட் இஸ் தர்ட்டி மினிட்ஸ் டிலேய்ட்" என்றாள்

ஆஹா, பந்து இப்ப நம்ம பக்கம். "யுவர் ஏர்லைன்ஸ் இஸ் ஆல்வேஸ் லேட்" என்று சிரித்தேன். என்ன நக்கலா என்பது போல் அவளும் சிரித்துக் கொண்டே ஜன்னல் சீட்டில் துண்டு போட்டுக் கொடுத்தாள்.

மேலும் ஒரு அரை மணி நேரம் தாமதமாக எட்டு மணிக்கு விமானம் கிளம்பியது. வார நாளாதலால் உள்ளே வெகு சில பயணிகளே இருந்தனர். பொழுதை ஓட்ட, எதிரிலிருந்த சின்னத்திரையில் இருந்த ஆங்கிலப் படங்களை தேடினேன். க்ளாஸிக்கல் பிரிவில் "லாரன்ஸ் ஆஃப் அரேபியா" இருந்தது.

பலமுறை இத்திரைப்படத்தை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், விகடனில் செழியன் எழுதிய உலக சினிமா தொடரிலும் இதன் விமர்சனத்தை படித்திருக்கிறேன். அத்துடன் விமானம் செல்லும் பாதையும் அரபிப் படைகள் பயணம் செய்ததும் ஒன்றே என்பதால் ஆர்வமாகப் பார்க்கத் துவங்கினேன்.



செல்லும் வழியில்

அமீரகத்திலிருந்து வட மேற்கில் மிக நீண்ட பாலைவனம், அதன் நடுவே செல்லும் ரயில் பாதை, வாடி ரம் (Wadi Rum) மலைத் தொடர்கள் என வரலாற்றின் முக்கிய இடங்களை மேலிருந்து காணக் காண மகிழ்ச்சியும் சிலிர்ப்பும் உள்ளத்தில் மாறி மாறிக் குடிகொண்டது.

நான்கு மணி நேரப் பயணத்தில் மூன்று மணி நேரம் லாரன்ஸுடனே ஜோர்டானின் ஒரே கடற்கரை நகரமான அகாபாவை கைப்பற்ற பாலைவனத்தில் நெடும் பயணம் மேற்கொண்டேன். உள்ளூர் நேரப்படி சரியாக பத்து மணிக்கு அம்மானின் "ராணி ஆலியா" விமான நிலையத்தில் தரை இறங்கியது எங்கள் விமானம்.

கடவுச்சீட்டு கன்ட்ரோல் அதிகாரி இந்தியரா? இங்கு என்ன வேலை? எங்கு தங்குகிறீர்கள்? எத்தனை நாட்கள்? என்று குடைந்து விட்டு "அருகிலிருக்கும் காவல் நிலையத்தை ஒரு வாரத்துக்குள் தொடர்பு கொள்ளவும்" என சீல் வைத்துக் கொடுத்தார்.

"ஹூம் நம்ம மூஞ்சியப் பாத்தாலே எல்லோருக்கும் சந்தேகம் வந்துருமே" என்று எண்ணியபடியே வெளியே வந்து விமான நிலைய டாக்ஸியைப் பிடித்தேன்.


டிரைவர் ஒரு பாலஸ்தீனியர், குதறிக் குதறி ஆங்கிலம் பேசினார். மெதுவாக அவரிடம் "சாவப்போக சாரி சாவுக்கடலுக்குப் போக எவ்வளோ நைனா?" என்று கேட்டேன்.


'Dead Sea'யின் முன்பு


"போக வர நூறு ஜே.டி. அங்கே ஒரு இரண்டு மணி நேரம் வெயிட்டிங்குடன் சேர்த்து" என்றார்

கணக்குப் போட்டுப் பார்த்தால் இந்திய ரூபாயில் ஏழாயிரத்து ஐநூறுக்கு அருகில் வந்து தலையை லேசாக சுற்றியது. பேரம் பேசுமாறு ஏற்கனவே பலரும் கூறியிருந்ததால் ஐம்பதிலிருந்து ஆரம்பித்தேன்.

அவரும் உடன் பல டிஸ்கவுன்டுகளை அள்ளி விட்டார். டெட் ஸீ உடன் ஜேர்டான் நதியையும் காட்டுகிறேன், ஏசுநாதர் ஞானஸ்நானம் (Place where Jesus baptized by John on the banks of Jordan River) பெற்ற இடத்தையும் காட்டுகிறேன் என்றார்.

அப்படியென்றால் எழுபது என்றேன். சரி, செய்ன்ட் மோசஸின் நினைவிடமுள்ள நீபோ மலைக்கும் (Mount Nebo) அழைத்துச் செல்கிறேன், நூறு கொடுங்கள் என்றார்.

ஒரே நாளில் இத்தனை இடமா என்று பேராசையில் எண்பதுக்கு பேரம் படிந்ததும் "நேராக ஹோட்டலுக்கு செல்லுங்கள் மூட்டையை அங்கே வைத்துவிட்டு பத்தே நிமிடத்தில் கிளம்பிவிடலாம்" என்றேன்

அறையில் எல்லாவற்றையும் எறிந்து விட்டு அலுவலகத்துக்கு அழைத்து தகவல் சொல்லியாகி விட்டது. திட்டப்படி மறுநாள்தான் மீட்டிங் என்பதால் வெளியே சுற்றுவதற்காகவே இன்றைய காலை விமானத்தை பதிவு செய்திருந்தேன்.

மணி பதினொன்றரை ஆகிவிட்டிருந்தது. ஒரு டவலுடன் காமிராவையும் பைனாகுலரையும் எடுத்துக் கொண்டு அவசரமாக கீழே வந்து ரிசப்ஷனில் "டெட் சீ செல்கிறேன்" என்று சொன்னதும் "பாஸ்போர்டை மறக்காமல் எடுத்து செல்லுங்கள், அங்கங்கு ராணுவ சோதனையகங்கள் இருக்கும்" என்று கிலி ஏற்படுத்தினார்கள்.




சாவுக்கடலில் மிதக்கும்போது

1994ல் இஸ்ரேலுக்கும் ஜோர்டானுக்கும் ஏற்பட்ட அமைதி உடன்படிக்கையைத் தொடர்ந்து தற்போது எல்லையில் அவ்வளவு பதற்றமில்லை என்றாலும் ராணுவ கேம்ப்கள் அனைத்தும் அந்த வழியில்தான் இருக்கிறது. எனவே தனியே செல்வதற்கு சற்றே அச்சமாக இருந்தாலும் இன்னும் சில மணி நேரங்களில் காணப் போகும் இடங்களின் புவியியல் அதிசயம் மற்றும் சரித்திர முக்கியத்துவம் ஆகியவற்றை எண்ணியபடி உற்சாகமாக கிளம்பினேன்.

Friday, November 20, 2009

ஆறோடும் மண்ணில்..!




விவசாய நிலங்கள் குறைந்து வருவதையும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு பற்றியும் நண்பர் கதிர் ஆற்றாமையுடன் எழுதிய இந்த இடுகையைப் படித்ததும் இன்று மனை நிலங்களாக மாறியுள்ள எங்கள் ஊரின் வயல்கள் நினைவுக்கு வந்தன.

ஏழு குளத்துப் பாசனம், பி.ஏ.பி வாய்க்கால் நீர், அமராவதி ஆறு, பாலாறு, அமராவதி அணை, திருமூர்த்தி அணை என்று தண்ணீருக்குப் பஞ்சமே இல்லாத ஏரியாவாக இருந்தாலும் ஒரு சில பண்ணையார்களைத் தவிர பெரும்பாலான சிறு விவசாயிகளின் நிலை சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை கவலைக்கிடமாகவே இருந்தது. ஆனால் தகவல் தொழில்நுட்பப் புரட்சி இன்று இவர்கள் வாழ்வையும் அடியோடு மாற்றிவிட்டது என்றால் மிகையில்லை. பயிர் செய்யாத புஞ்சை நிலங்கள் ஏக்கர் மூன்று லட்சம்,  நெல் மற்றும் கரும்பு வயல்கள் ஏக்கர் ஐந்து லட்சம், தென்னந்தோப்புகள் ஏக்கர் பத்து லட்சம் என கடந்த ஐந்து ஆண்டுகளில் பல லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகியுள்ளனர்.

பள்ளி நண்பன் ஒருவனின் தந்தையும் ஒருகாலத்தில் சிறு விவசாயிதான். கையிலிருந்த இரண்டு ஏக்கர் நிலம், ஒரு சில ஆடு மாடுகளோடு இரண்டு மகன்களையும் ஒரு மகளையும் படிக்க வைக்க மிகுந்த சிரமப் பட்டார். மூத்தவன் பள்ளி இறுதி ஆண்டுடன் படிப்பை நிறுத்திவிட்டு குடும்ப பாரம் சுமக்க பஞ்சாலைக்குப் போக, இவனை மட்டும் மேற்படிப்பு படிக்க கல்லூரிக்கு அனுப்பினார். நானும் வேறு ஒரு ஊருக்கு படிக்க சென்று விட அதன் பிறகு அவனுடனான தொடர்பு வெகுவாய் குறைந்து போனது. கடந்த முறை ஊருக்கு சென்ற போது கடை வீதியில் அவனை சந்திக்க நேர்ந்தது.

கழுத்தில் மைனர் செயின், கையில் ப்ரேஸ்லெட், கதர் சட்டை, வெள்ளை வேஷ்டி, என்ஃபீல்ட் பைக் என அடையாளம் தெரியாமல் மாறிவிட்டிருந்த அவனை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என யோசித்தபடி கடந்த போது, பின்னால் வந்து தோளைத் தொட்டான்.

"டேய் என்னய தெரியலயாடா ?"

ஒரு நிமிடம் உற்றுப் பார்த்து "டேய், நீயா? என்னடா இது ஆளே மாறிட்ட? வீட்டுல அம்மா, அப்பா, அண்ணன், அக்கா எல்லாம் நல்லாருக்காங்களா?"

"எல்லாரும் நல்லாருக்காங்க நீ எப்பிடி இருக்க?"

"எனக்கென்ன? நீ என்ன பண்ணிட்டிருக்க? அப்பா இன்னும் விவசாயம்தான் பாக்கறாரா?"

"விவசாயமா? அதெல்லாம் வுட்டு ரெண்டு வருசமாச்சு. நம்ம காடு ரோட்டுமேல இருந்ததால திருப்பூர்ல இருந்து ஒரு பார்ட்டி சைட் போடறதுக்காக ஏக்கர் இருபத்தஞ்சு லட்சத்துக்கு முடிச்சுட்டாங்க. நானும் அண்ணனும் இங்க டவுன்லதான் பைனான்ஸ் பண்ணிட்டிருக்கோம். ஒரு நாளக்கி ரெண்டாயர்ருவா திரும்புது"

"ம்ம்.. பாத்தாலே தெரியுதுடா.. வீட்டுல எல்லோரையும் கேட்டதா சொல்லு"

"கண்டிப்பா. நானு வசூலுக்கு கெளம்பணும், சாயங்காலமா வூட்டுப் பக்கம் வாடா." என்று பைக்கை உதைத்துக் கிளம்பினான்.

"என்ன பயிரு போட்டாலும் வெலயே கெடக்க மாட்டேங்குது. இனிமே விவசாயத்த நம்பி பொழக்க முடியாது. இந்தக் காட்ட வித்துப் போட்டு ஏதாவது கடயப் போடலாம்" என்று பத்து வருடங்களுக்கு முன்பு கிடைத்த விலைக்கு, இருந்த மூன்று ஏக்கர்களையும் விற்று டீக்கடை போட்டு, புதிய கடைகளின் வரவை சமாளிக்க முடியாமல் நொடிந்துபோன இன்னொரு நண்பனின் அப்பாவும் நினைவுக்கு வந்தார்.

வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது பாருங்கள். நேற்று பழைய பாடல்களை யூ ட்யூபில் தேடிக் கொண்டிருந்த போது, 'பழனி' படத்தின் இந்தப் பாடல் அகப்பட்டது. ஒவ்வொரு வரியும் எங்கள் ஊரின் அழிந்து போன வயல்களையும், விவசாயிகளையும், திருவிழாவைப் போன்ற அறுவடை நாட்களையும் கண்மும் கொண்டுவந்து மனதை கனக்க வைத்தது. சற்றே அமைதியான சூழலில் கேட்டுப் பாருங்கள், உங்களுக்கும் கிராமத்து நினைவுகள் திரும்பலாம். பாடலின் வரிகள் கீழே..



ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்

போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்...

ஆறோடும்.............

மண்ணிலே தங்கம் உண்டு
மணியும் உண்டு
வைரம் உண்டு

கண்ணிலே காணச் செய்யும்
கைகள் உண்டு
வேர்வை உண்டு

நெஞ்சிலே ஈரம் கொண்டு
பாசம் கொண்டு பசுமை கொண்டு
பஞ்சமும் நோயும் இன்றி
பாராளும் வலிமை உண்டு

சேராத செல்வம் இங்கு சேராதோ
தேனாக நாட்டில் எங்கும் பாயாதோ

ஆறோடும்..........

பச்சை வண்ண சேலை கட்டி
முத்தம் சிந்தும் நெல்லம்மா...
பருவம் கொண்ட பெண்ணைப் போலே
நாணம் என்ன சொல்லம்மா,
நாணம் என்ன சொல்லம்மா....

அண்ணன் தம்பி நால்வருண்டு
என்ன வேண்டும் கேளம்மா..
அறுவடை காலம் உந்தன்
திருமண நாளம்மா...
திருமண நாளம்மா

போராடும்......
ஆரோடும்.....

கை கட்டி சேவை செய்து
கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லி பிச்சை பெற்றால்
அன்னை பூமி கேலி செய்வாள்...

தேர் கொண்ட மன்னன் ஏது
பேர் கொண்ட புலவன் ஏது
ஏர் கொண்ட உழவன் இன்றி
போர் செய்யும் வீரன் ஏது
போர் செய்யும் வீரன் ஏது...

போராடும்.........
ஆறோடும்..........

எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம். சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், P.B. ஸ்ரீனிவாஸ், ஏ.எம். ராஜன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

Monday, November 9, 2009

ஜெயகாந்தன், நெடுமாறன், நக்கீரன், அஜீத்குமார்



சில தினங்களுக்கு பதிவுலகிலிருந்து ஒதுங்கியிருக்கலாம் என்று எண்ணிய வேளையில் நண்பர் செந்தில்வேலன் தமிழகத்தின் பிடித்த, பிடிக்காத தொடர்பதிவுக்கு அழைத்தது மீதமிருந்ததால் அந்தக் கடமையையும் முடித்து விடுகிறேன்.

ஒரு துறையில் ஒரே ஒருவரைத்தான் பிடிக்கும்/பிடிக்காது என்று தேர்வு செய்ய முடியவில்லை, என்வே தொடரின் விதியை மீறி சிலவற்றில் இரண்டு மூன்று என உண்டு.


1) எழுத்தாளர்கள்

பிடித்தவர் - ஜெயகாந்தன். விளிம்பு நிலை மனிதர்களைக் கண்டவுடன் எனக்கு எழுந்த வெறுப்பை கருணையாக மாற்றியது சிங்கத்தின் எழுத்துக்கள்தான். பள்ளி இறுதி மட்டும் கல்லூரி நாட்களிலேயே தீவிரமாக வாசித்திருந்தால் ஒருவேளை என் வாழ்வு தடம் மாறியிருக்கும். ஆனால் அரசியல்வாதிகளின் மீதான வெறுப்பையும் தாண்டி இன்னமும் கொஞ்சமாவது சமூக அக்கறை உள்ளத்தில் இருக்கிறதென்றால் அதற்கு முழுக்காரணம் அவர்தான்.

பிடிக்காதவர் - ஜெயமோகன். என்ன காரணமென்று தெரியவில்லை, ஜெமோவின் மீது ஒரு இனம் புரியாத வெறுப்பு. கல்லூரி நாட்களில் வாங்கிய 'சங்க சித்திரங்கள்'தான் நான் வாசித்த அவரின் ஒரே புத்தகம் ஆனால் பல முறை முயன்றும் சில பக்கங்களுக்கு மேல் புரட்ட முடியாமல் அப்படியே அட்டாலியில் வீசி விட்டேன். விஷ்ணுபுரத்தை பலரும் சிலாகித்தாலும் மீண்டும் ஒருமுறை அவரை வாசிக்க நேரமும் பொறுமையும் இல்லை.

2) நடிகர்கள்

பிடித்தவர் - அஜீத்குமார்.  இவர் என்ன நடிக்கிறார் என்று கேட்காதீர்கள், நிஜ வாழ்விலும் நடிக்கத் தெரியாதவர். இவரின் உதவியால் மேலே வந்த இயக்குனர்கள், வெளியே தெரியாமல் செய்யும் பல உதவிகள் என அவரின் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், இவ்வளவு தோல்விப்படங்கள் கொடுத்த எந்த நடிகரும் இவர்போல் திரையுலகில் நிலைத்ததில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் துவளாத இவரின் தன்னம்பிக்கை பல நேரங்களில் எனக்கு உற்சாக டானிக்.

பிடிக்காதவர்கள் - காதல் படத்தில் விருச்சிககாந்த் திரைப்பட வாய்ப்பு கேட்கும்போது சொல்வார், "இல்ல சார், மொதல்ல ஹீரோ, அப்புறம் கொஞ்சம் அரசியல், அப்புறம் சி.எம், அப்புறம் டெல்லி". இதேபோல் இன்று நடிக்க ஆரம்பிக்கும் முன்னரே கோட்டைக்கு ஆசைப்படும் தமிழ் சினிமாவின் தளபதிகள் எவரையும் பிடிக்காது.

3) மாவட்ட ஆட்சியர்

பிடித்தவர் - ககன்தீப்சிங் பேடி. "இந்த மாநிலத்தில் பணியில் இணைந்தபோதே நானும் தமிழனாகி விட்டேன்" என்றவர். சுனாமியின் போது கடலூர் மாவட்டத்தில் இவர் ஆற்றிய பணியை யாராலும் மறக்க முடியாது என நினைக்கிறேன். ராதாகிருஷ்ணனையும் பிடிக்கும் என்றாலும் மீடியா வெளிச்சம் எப்போதும் அவர் மீதே இருந்தது. இதே போல் சுற்றுலாத் துறை செயலர் இறையன்பு, சுப்ரியா சாஹூ(முன்னாள் உதகை ஆட்சியர், தற்போது செய்தி ஒளிபரப்புத்துறை இயக்குனர் - டெல்லி) ஆகியோரையும் பிடிக்கும்.

பிடிக்காதவர் - கலைவாணன். ஒரு காலத்தில் எங்கள் கோவை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தார். பல ஊழல் வழக்குகளில் சிக்கி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.


4) காவல்துறை அதிகாரி

பிடித்தவர் - சைலேந்திர பாபு. எண்பதுகளின் இறுதியில் வட மாவட்ட கலவரங்களின் போதும், வட சென்னை ஆணையராக இருந்த போதும் இவர் ஆற்றிய சேவைகளை அந்த துறை நண்பர்கள் கூறிய போது வியந்தேன். அதேபோல் அந்தப் பகுதி மக்களும் அவரை மறக்க மாட்டர்கள் என எண்ணுகிறேன். ஆட்சி மாற்றத்தால் தற்போது புகளூர் காகித ஆலை புலனாய்வுத்துறை ஐஜியாக டம்மியாக்கப் பட்டுவிட்டாலும் பல சிவில் சர்வீஸ் மாணவர்களின் ரோல் மாடல் இவர்தான். இவரல்லாமல் விஜயகுமார், ஜாங்கிட், மற்றும் நேர்மையான அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளையும் பிடிக்கும்

பிடிக்காதவர் - வால்டர் தேவாரம்.

5) கல்வித் தந்தைகள்

பிடித்தவர்கள் - பொள்ளாச்சி நா. மகாலிங்கம் மற்றும் பூ.சா. கோவிந்தசாமி நாயுடு அவர்களின் PSG குழுமம். பொறியியல் கல்வி என்றாலே கோவை மாவட்டம்தான் என்று பெயரெடுக்க இந்த இரு பெரியவர்கள்தான் காரணம். வெறும் கல்லூரிகளை மட்டும் திறக்காமல் ஒருங்கிணைந்த தொழிற்சாலைகளையும் நிறுவி வேலைவாய்ப்பையும் பெருக்கிய இந்த இரு பெரும் குழுமங்களால்தான் பல தடைகளையும் தாண்டி கோவை மாவட்டம் இன்னும் தாக்குப் பிடிக்கிறது.

பிடிக்காதவர்கள் - கல்வியை வியாபாரமாக்கிய ஜேப்பியார், எஸ் ஆர் எம் குழுமத்தின் பச்சமுத்து மற்றும் காளான்களாய் முளைத்துள்ள பல பொறியியல் கல்வித் தந்தைகளும்.

6) விஞ்ஞானிகள்

பிடித்தவர்கள் - முன்னாள் இந்திய அணுசக்தி கழகத் தலைவர், பிரதமரின் அறிவியல் ஆலோசகராக இருந்த டாக்டர் ஆர். சிதம்பரம் மற்றும் தற்போதைய ப்ரம்மோஸ் செயல் திட்ட இயக்குனர் திரு. சிவதாணுப் பிள்ளை. அப்துல்கலாமுடன் இணைந்து தமிழரின் பெருமையை உலகறியச் செய்ததில் இந்த இருவருக்கும் பெரும் பங்கு உண்டு.

பிடிக்காதவர் - மயில்சாமி அண்ணாதுரை. எங்கள் ஊர்காரர்தான் என்றாலும் சற்றே மீடியா மோகம் பிடித்தவர் என்று தோன்றுகிறது.

7) அரசியல் தலைவர்கள்

பிடித்தவர்கள் - நெடுமாறன் ஐயா உள்பட ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் எல்லா தலைவர்களையும் மதிக்கிறேன. சம காலத்தில் அரசியலில் இறங்கியவர்கள் அனைவரும் பெரிய அளவில் செட்டிலாகிவிட இன்னமும் பொதுவாழ்வில் எளிமையை கடைபிடிக்கும் அனைத்து கம்யூனிஸ்ட் தலைவர்களையும் பிடிக்கும்.

பிடிக்காதவர்கள் - ஜெயலலிதா, ராமதாஸ்.

8) ஆன்மீகத் தலைவர்கள்

 பொதுவாகவே இந்தக் கூட்டத்தை எனக்குப் பிடிக்காது. ஆனால் அவ்வப்போது செய்யும் பொதுத் தொண்டுகளால் மனதைக் கவர்ந்த தமிழர் Art of Living ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மறைந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பிடிக்காதவர்கள் - பெரிய லிஸ்டே உண்டு, குறிப்பாக கல்கி சாமியார் மற்றும் மேல்மருவத்தூர்காரர்.

9) பத்திரிகையாளர்கள்

பிடித்தவர்கள் - நக்கீரன் ராஜகோபால், மாலன் மற்றும் பா. ராகவன்.

பிடிக்காதவர்கள் - ஹிந்து ராம் மற்றும் அந்துமணி. இவர்கள் இருவரையும் சில வருடங்கள் முன்பு வரை மிகவும் மதித்தேன். ஆனால் கடந்த காலங்களில் இவர்களின் மற்றொரு முகம் வெளியே தெரிய ஆரம்பித்தபோது உடைந்து போனேன். ஹூம், அறிவாளிகள் எல்லோருக்கும் மனிதாபிமானமும் இருக்கும் என்று எண்ணியது எவ்வளவு முட்டாள்தனம்.

10) ஊர் / மனிதர்கள்

பிடித்தது - உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கொங்கு நாட்டின் அனைத்து ஊர்களும். பசுமை நிறைந்த எங்கள் ஏரியா என்பதால் மட்டுமல்ல, கடும் உழைப்பாளிகளும், சக மனிதனை மதிக்கும் பண்பு நிறைந்தவர்களும் நிறையப் பேர் இருப்பதால்.

பிடிக்காதது - சென்னை. காரணம் மேலே சொன்னதுதான். அறிமுகமில்லாதவர்களை, வயதானவர்களைக் கூட ஒருமையில் அழைக்கும் பண்பு. ஒவ்வொரு வார்த்தைக்கும் 'ங்க' போட்டலும் பதில் 'இன்னா?' என்றுதான் பெரும்பாலும் வரும். தற்போது எங்கள் திருப்பூரும் சென்னைபோல் மாறிவருகிறது என கேட்கும் போது வேதனையாய் இருக்கிறது.

எனக்குத் தெரிந்த அனைத்துப் பதிவர்களையும் வேறு பலர் அழைத்து விட்டதால் நண்பர் ஜோ ஆனந்த் மற்றும் ஆரூரன் விசுவநாதன் ஆகிய இருவரை மட்டும் தொடர அழைக்கிறேன், ஏற்பார்கள என்ற நம்பிக்கையில்.

அவசியம் ஏற்பட்டால் ஒழிய இன்னும் சில தினங்களுக்கு பதிவெழுதும் உத்தேசமில்லை.  அடுத்த வாரம் ஜோர்டான் பயணம் அதற்கடுத்த வாரம் இந்தியா என தொடர்ந்து எஞ்சியுள்ள பணிகள் மலைபோல் கண்முன் நிற்கின்றன, பார்ப்போம்.

Sunday, November 8, 2009

நன்றியுடன் சில நினைவுகள்


இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு தொடக்கத்தில் வார நாட்கள் பூனாவிலும் வார இறுதிகள் மும்பையிலும் என ஓய்வின்றிப் பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில்தான் இணையக் குழுமங்களின் அறிமுகம் கிட்டியது. விமான் நகர் விடுதியில் தனிமையான மாலை நேரங்களில் எனக்கிருந்த துணை சில புத்தகங்களும், மடிக்கணினியும் அதிலிருந்த இணைய இணைப்புமே.

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கியிருந்த கிழக்குப் பதிப்பகத்தின் 'சே குவாரா - வாழ்வும் மரணமும்' புத்தகத்தை அப்போதுதான் வாசித்து முடித்திருந்தேன். 'சே' தொடர்பாய் சில ஆவணங்களை உறுதிப் படுத்த இணையத்தில் தேடிய போது பல இணையக் குழுமங்களும் அவைகளில் உலகளாவிய மனித குலத்தின் உரிமைகள், தேடல்கள் குறித்தான விவாதங்களும் என்னைக் கவர்ந்ததால் யாஹூவின் சே குழுமத்தில் இணைந்து என்னுடைய கருத்துக்களையும் பதிப்பிக்கத் துவங்கினேன்.

தென்னமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், பாலஸ்தீனியர்கள், கொரியர்கள் என முகம் தெரியாத பல நாட்டு மனிதர்களின் உள்நாட்டு அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்ற விவாதங்களை தினமும் விழி விரியப் பார்த்து பகிர்ந்து கொண்டிருந்த போது பல இந்தியர்களும், தமிழர்களும் இன்று பிரபலமாய் இருக்கும் ஒரு பெண் பதிவரும் அதே குழுமத்தில் இணைத்திருந்து அறிவுபூர்வமான கருத்துக்களை பரிமாறியது என்னை வியப்பிலாழ்த்தியது.

அதன் பின்னர் அந்தக் குழுமத்தில் சில இணைய விஷமிகளின் கைவரிசையைத் தொடர்ந்து குவிந்து கொண்டிருந்த ஸ்பாம் மின்னஞ்சல்களிலிருந்து தப்பிக்க அதிலிலிருந்து வெளியேறினேன். சில தினங்களுக்குப் பின் பணியிட மாற்றம், புதிய ப்ராஜெக்டுகள் என்று இணையக் குழுமங்களை மறந்திருந்த வேளையில், மீண்டும் இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு துவக்கத்தில் மற்றுமொரு தருணத்தில் வலையில் மேய்ந்து கொண்டிருந்த போது தமிழ்மணத்தின் அறிமுகம் கிட்டியது.

சினிமா, அரசியல், சமூகம் என பல துறைகளில் தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் வலைப்பதிவுகளாய் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தது என்னை மிகவும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியதால் வெறி பிடித்தாற் போல வலைப்பதிவுகளை வாசிக்கத் துவங்கியனேன். அப்போது சில உடன்பாடில்லாத பதிவுகளில் என்னுடைய பின்னூட்டங்கள் நிராகரிக்கப்பட்டமை, சில பின்னூட்டங்களுக்கு பதிலின்மை என ஏனோ விமர்சனங்கள் புறக்கணிக்கப் படுவதாய் தோன்றியது.

ஒரு வேளை பிரபலங்கள் பதிலளிக்க மாட்டார்களா அல்லது சகிப்புத்தன்மை வலையுலகில் குறைவா என்று தெரியாமல் ஏற்பட்ட குழப்பமான மனநிலையில் சரியாக இரண்டு ஆண்டுகள் முன்பு இதே நவம்பர் மாதம் "எண்ணங்களில்.. " என்ற வலைப்பூவினைத் துவங்கி ஏதேனும் கிறுக்கலாம் என்று எண்ணிய வேளையில் மீண்டும் ஒரு பணியிட மாற்றம்.

இப்போது புதிய பொறுப்புகள், பல சவாலான அசைன்மென்டுகள் என மீண்டும் பணியில் மூழ்கி வலைப்பூவைத் துவங்கியதையே மறந்து போனேன். ஆனால் வாசிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

அமீரகத்திற்கு வந்த பின்னர் பிரபல பதிவர்களான ஆசிப் அண்ணாச்சி, பினாத்தல் சுரேஷ், அய்யனார், அபி அப்பா, குசும்பன், சென்ஷி ஆகிய பலரையும் சந்திக்க வேண்டும் என்று விரும்பினாலும் ஏதோ ஒரு விதமான கூச்சம் பல நாட்களாக தடுத்துக் கொண்டே இருந்தது.

வேலை குறைவாக இருந்த கடந்த ஜூன் மாதத்தில் கராமாவில் பதிவர் சந்திப்பு என்ற இடுகையைப் பார்த்து நண்பர், பதிவர் கலையரசனின் தொலைபேசியில் அழைத்து வாசகர்களும் கலந்து கொள்ளலாமா என்று கேட்டவுடன் அவரும் சம்மதிக்க, பல பிரபலங்களை ஒன்றாய் சந்திக்கும் மகிழ்வில் கிளம்பியதுதான் என் வலை வாழ்வின் திருப்புமுனை.

அந்த சந்திப்பின்போது அய்யனார் மற்றும் சுந்தரராமன் சார் இருவரும் நீங்கள் ஏன் எழுதக் கூடாது என்று ஊக்குவிக்க, 'எண்ணங்களில்..' 'ஒரு ஊரில்..' எனப் பெயர் மாற்றம் பெற்று திரட்டிகளில் இணையத் துவங்கியது.

ஆரம்ப நாட்களில் அமீரகப் பதிவர்களின் தொடர் ஊக்குவிப்பு, எப்போது சந்தித்தாலும் என் பதிவுகளை அக்கறையாய் விசாரிக்கும் ஆசாத்ஜி, தினமும் ஒரு முறையேனும் அலைபேசியில் உரையாடிவிடும் நண்பர் செந்தில்வேலனின் நட்பு, சென்ஷி, வினோத் கௌதம், 'என் பக்கம்' ப்ரதீப், கார்த்திகேயன் (அறிவுத்தேடல்) மற்றும் கலையரசன் (வடலூரான்) போன்றோரின் தொடர் பின்னூட்டங்கள்,  ஆகியவைதான் கடினமான பணிச்சுமையிலும் வலையில் எழுத மூலக் காரணம்.

அதன் பின்னர் நண்பர்கள், பதிவர்கள் ஜோ ஆனந்த், ப்ரபாபகர், ஈரோடு கதிர் அண்ணன், திருப்பூர் ஜோதிஜி ஆகியோரின் அன்பு, எங்கள் ஊர்க்காரர்கள் 'பழமைபேசி ' மணி அண்ணன், 'துக்ளக்' மகேஷ் ஆகியோரின் தொடர்பு  என வலையுலகம் என் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி விட்டது.

தமிழ்மணத்தின் நட்சத்திர வாரம் முடிவடையும் இன்னாளில், பிரபலம் என்று எவரும் இல்லை எல்லோரும் பதிவர்கள் என்ற ஒரே குடும்பம்தான் என அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து நெகிழவைத்த ஆசிப் அண்ணாச்சிக்கும், வாய்ப்பளித்த தமிழ்மணம் குழுவினருக்கும், நட்சத்திர வாரத்தில் பின்னூட்டங்கள் மற்றும் தமிழ்மணம், தமிழிஷில் ஓட்டுக்களைப் பதித்த அனைத்து நண்பர்களுக்கும், இளமை விகடனுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

Friday, November 6, 2009

எதிர்காலம் எவர் கையில்?



நம்மில் பலருக்கு சமூக அக்கறை இருந்தாலும், நம்மால் பங்களிக்கக் கூடிய பல நிகழ்வுகளிலும் கூட வெறும் பார்வையாளராய்தான் இருக்கிறோம். அவ்வப்போது அரசு சில நலத்திட்டங்களை செயல்படுத்த முனைந்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இன்மையால் பெரும்பாலும் அவை தோல்வியிலேயே முடிகிறது. சமூக ஏற்றத்தாழ்வு கண்டு பல நேரங்களில் பரிதாபத்தோடும் புலம்பல்களோடும் நிறுத்திக் கொள்கிறோமே தவிர ஆக்கப்பூர்வமான செயல்களில் இறங்குபவர்கள் வெகு குறைவே.

வட மாநிலங்களோடு ஒப்பிடும்போது நம் தமிழகத்தில் இந்த வேறுபாடு சற்று குறைவு என்றாலும் அனைவருக்கும் சம உரிமை என்ற இலக்கை அடைய இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. கான்வென்டில் படிக்கும் நம் பிள்ளைகளின் பொதி மூட்டைகளைப் பற்றிக்கூட கவலைப்படாத நாம் என்றாவது வெளி உலகத் தொடர்பே இல்லாத பல குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் பற்றிக் கவலைப் பட்டிருக்கிறோமா?

ஆனால் நம்மைப்போன்று கணினியிலேயே காலைக் கடன்களைக்கூட கழிக்கும் இந்தத் தலைமுறை இளைஞர்களின் மத்தியில் சில செயல் வீரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட சிலரால் உருவாக்கப் பட்ட இயக்கம்தான் குக்கூ குழந்தைகள் வெளி. இதன் அங்கத்தினர் அனைவரும் படித்த, சமூக ப்ரக்ஞையுள்ள பட்டதாரி இளைஞர், இளைஞிகள்.

சமூகம் என்று நாம் சொல்லிக்கொள்ளும் கட்டமைப்பின் தொடர்பு எல்லைக்கு அப்பால் வெகு தொலைவில் உள்ள பல அரசு, ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் கற்பனை சுதந்திரத்தை வெளிக்கொணர,  சிறுவர் உலகத் திரைப்படங்களை திரையிட்டு, அவற்றின் மீது அவர்களுக்குள்ளேயே விவாதிக்க வைக்கின்றனர்.

அது மட்டுமின்றி சுடுமண் சிற்பங்கள் செய்தல், ஓரிகாமி(Origami) என்னும் காகிதம் மூலம் பல உருவங்களை செய்தல், ஓவியம் வரைதல், மரம் நடுதல்/பராமரித்தல், இயற்கை மற்றும் வன உயிரினங்கள் காணுலா(Flora and Fauna Trekking) உட்பட பல பயிற்சிகளை இந்த மாணவர்களுக்கு அளிக்கிறார்கள். அத்துடன் சத்திய சோதனை அங்காடியையும் நிறுவி மாணவர்களிடத்து நேர்மையை ஊக்குவிக்க இருக்கிறார்கள்.



வேலூர் மாவட்டத்தில், திருப்பத்தூர் சார் ஆட்சியரகம் இந்த இயக்கத்துடன் இணைந்து ஐந்து பள்ளிகளை தேர்வு செய்து மேற்கண்ட பயிற்சிகளை அளிக்கிறார்கள். இவற்றில் மூன்று பழங்குடியினர் பள்ளி, ஒரு ஆதி திராவிடர் பள்ளி மற்றும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர் முகாமிலுள்ள பள்ளி ஆகியவை உள்ளடங்கும்.

மாதம் இரண்டு நாட்கள் வீதம் ஒவ்வொரு பள்ளியிலும் இனித் தொடரும் ஐந்து மாதங்களுக்கு இந்த சிறுவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது.

முதல் கட்டமாக ஜவ்வாது மலையில் உள்ள நெல்லிவாசல்நாடு கிராமம், வனத்துறை உயர் நிலைப் பள்ளியில் இன்று முதல் (நவம்பர் 6, 7, 8) மூன்று தினங்களுக்கு "திசைகளை தீர்மானிப்பது காற்று" என்ற சிறுவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது.  இங்குள்ள குழந்தைகள் அனைவரும் பழங்குடியினர். இவர்களில் பெரும்பாலானவர்களின் பெற்றோர் பெங்களூர் மற்றும் சென்னையில் கட்டிடக் கூலித் தொழிலாளர்களாக பணிபுரிகிறார்கள்.

இந்த நிகழ்வுகளில் தன்னார்வலராக பங்கெடுக்க விரும்பினால் தெரிவியுங்கள், உரியவர்களைத் தொடர்பு கொள்ளச் செய்கிறேன்.

குறிப்பு :- ஒருங்கிணைப்பாளர்களின் அனுமதி பெறுவதற்கு சிறிது தாமதமானதால் முன் கூட்டியே இந்த இடுகையை பதிக்க முடியவில்லை. அடுத்த நிகழ்வுக்கு சில தினங்களுக்கு முன்னமே பதிவிடுகிறேன், அந்தந்த பகுதியிலுள்ள தன்னார்வலர்களும் இணைந்து கொள்ளுங்களேன்.

Thursday, November 5, 2009

தமிழ்மணம், தலைக்கறி, தனிமையின் இசை..





ஹூம்.. எத்தனை முறை மருத்துவர்களை சென்று பார்த்தாலும் இந்த தூக்கத்தில் உளறும் வியாதி மட்டும் நிற்கவே மாட்டேன் என்கிறது. எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் ஒன்றையே சொல்கிறார்கள்.

"நைட்டு ரொம்ப நேரம் கண்ணு முழிக்காதீங்க. ஒரு பத்து மணிக்கே தூங்கிடுங்க. மனச எப்பவுமே ரிலாக்ஸா வச்சுக்கங்க. இதுக்கு மருந்தெல்லாம் ஒண்ணியும் கெடயாது. அப்புறம் முக்கியமா ஆபீஸ்ல தூங்காதீங்க. பகல்ல முழிச்சிருந்தா தான் நைட்டு ஒழுங்கா தூக்கம் வரும்" என்று அரதப் பழசான ஜோக்கை வேறு சொல்லி எரிச்சலூட்டுகிறார்கள்.

நாம் என்ன அரசு அலுவலகத்திலா வேலை செய்கிறோம்? மென்பொருள் துறையில் பத்து மணிக்கே தூங்குவதாவது? சரி, எப்படியாவது செயல்படுத்தலாம் என்று முயற்சித்து ஒருநாள் இரவு ஒன்பதரை மணிக்கு கண்ணயர்ந்தேன். நள்ளிரவு சரியாக ஒரு மணியளவில் மொபைல் கதறத் துவங்கியது. ச்சே, என்ன கொடுமடா இது என்று போனை எடுத்தால் டீம் மேட் அமெரிக்காவிலிருந்து அலறுகிறான்.

"மச்சான், பயங்கர சாணிடா. உன்னோட மாட்யூல் கவுந்துருச்சு. கஸ்டமர் இன்னைக்கு இங்கயே என்னப் பொதச்சுருவான்னு நெனக்கிறேன். உடனே லாகின் பண்ணுடா"

ஏன் மொபைலை அணைத்து விட்டுத் தூங்கக் கூடாது என்று கேட்பீர்கள். அப்படி ஒரு நாள் செய்ததால்தான் நிறுவனமே அவர்கள் செலவில் ஒரு கனெக்ஷனையும் வாங்கிக் கொடுத்துவிட்டார்கள், எப்பொழுதும் ரீச்சபிளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு.

அதற்கப்புறம் எங்கே உறக்கம் வரும்? மீண்டும் அடுத்த நாள் முதல் வழக்கம் போல் கனவில் வரும் உருவங்களுடனெல்லாம் உளறத் துவங்கினேன்.

சரி இதை எதற்கு இங்கே சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது, அதற்குமுன் நான் கண்ட சில அனுபவங்களையும் உங்களிடம் சொல்கிறேன், அதன் பிறகுதான் அதன் விபரீதத்தை உணர்வீர்கள்.

சென்னையில் நைனா வீட்டில் பேச்சுலராக குடியிருந்தபோது நிகழ்ந்த சம்பவங்கள் இவை. நைனா வீட்டைப் பற்றி இன்னொரு இடுகையில் சொல்கிறேன் இப்போது இந்தக் கொடுமையை கேளுங்கள்.

நண்பன் ஒருவன் டொக்டெர் விஜயின் தீவிர ரசிகன். எனக்கும் அவரின் நடனம் பிடிக்கும் என்றாலும் ஒரு அளவு இருக்கிறதல்லவா? ஆனால் அவன் ஒரு ரசிகன் என்பதை விட வெறியன் என்றே சொல்ல வேண்டும். டொக்டரைப் போல நடனமாட வேண்டும் என்பதற்காக வாங்கிய சம்பளத்தை அப்படியே ஜான் ப்ரிட்டோ நடனப்பள்ளியில் மாதாமாதம் ஒன்றாம் தேதி கொண்டு போய் கொட்டினான்.

மாலை நேரமானால் அவன்தான் எங்களின் பொழுதுபோக்கு. ஏதேனும் ஒரு குத்துப் பாடலை டிவிடியில் போட்டுவிட்டு அவன் தலைவனைப் போலவே ஒரு ஸ்டெப் கூட மாறாமல் ஆட ஆரம்பித்து விடுவான். இதில் என்ன பிரச்சினை என்கிறீர்களா?

சில நாட்கள் நள்ளிரவில் திடீரென்று பாடிக் கொண்டே ஆட ஆரம்பித்து விடுவான். அவன் சுய நினைவோடுதான் ஆடுகிறான் என்று எண்ணி விடாதீர்கள்.

அவனின் நாராசமான குரலைக் கேட்டு திடுக்கிட்டு விழித்தால் படுக்கையிலேயே உட்கார்ந்து கொண்டே ஆடுவான். அது எப்படி முடியும் என்று கேட்காதீர்கள் அவன் உறக்கத்தில் உட்கார்ந்து கொண்டுதான் ஆடுவான். போதாக்குறைக்கு நடுநடுவே சில பன்ச் டயலாக்குகளையும் உதிர்ப்பான்.

"அரசு, வாழ்க்கை ஒரு வட்டம் மாதிரி, இங்க ஜெயிக்கறவன் தோப்பான் தோக்கறவன் ஜெயிப்பான், மலடா திருமல.." என்று தமிழ் சினிமாவின் தலையெழுத்து தத்துவங்களையும் உதிர்ப்பான்.

சரிதான், பாவம் தீவிர ரசிகன் என்று கருணை காட்டாதீர்கள். டொக்டரிடம் பிடிக்காத ஒரே விஷயம் அவரின் பன்ச் டயலாக்குகள்தான். திரையரங்கிலேயே தாங்க முடியாது. இங்கே நள்ளிரவில் ஒருவன் அதையே ஒப்பித்தால் எப்படி உங்களால் உறங்க முடியும்?

"டேய் உங்கூட ஒரே ரோதனையாப் போச்சுடா. ஏண்டா இப்படிக் கண்டபடி ஒளர்ற? பேசாமத் தூங்குடா" என்று சொன்னால்,

"நீ கூடத்தான் நேத்து ராத்திரி ஏதோ சரவணபவன்ல போயி ரெண்டு மட்டன் பிரியாணி பார்சல்னு ஒளறுன, நான் ஏதாவது சொன்னனா?" என்று என்னுடைய வீக் பாயின்டிலேயே கை வைப்பான்.

அன்றும் அப்படித்தான், ஏதோ "சனியன் சகடை, பட்டாசுப் பாண்டி, சிவகாசி" என்று உளறிக் கொண்டிருந்தவன் திடீரென்று குரலை மாற்றி,

"கொல்றாங்கப்பா, கொல்றாங்கப்பா... கைய எவனோ வெட்டிட்டாம்பா" என்று அழ ஆரம்பித்தான.

ஏற்கனவே இது போன்ற ஒரு நள்ளிரவு சம்பவத்தால் ஆடிப் போயிருந்த தமிழகத்தில் மீண்டும் அதே போன்ற ஒரு குரலைக் கேட்டால் எப்படி இருக்கும்?

அலறி அடித்து எழுந்து விளக்கைப் போட்டால், வலது கையால் இடது கையைப் பிடித்துக் கொண்டு "அய்யோ கைய வெட்டிட்டாங்கடா.. சனியன் சகட செஞ்சுட்டாண்டா" என்று உறக்கத்தில் அழுது கொண்டிருந்தான்.

அவனைப்பிடித்து உலுக்கி சுய உணர்வுக்கு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

என்ன நடந்தது என்று மெதுவான விசாரித்தால், பையன் ஒருக்களித்துப் படுத்திருந்தபோது, இடது கையை தலைக்கு அடியில் வைத்திருக்கிறான். நீண்ட நேரம் அப்படியே இருந்ததால் கையில் இரத்த ஓட்டம் தடைபட்டு மரத்துப் போயிருக்கிறது. அதே வேளையில் கனவில் டொக்டரை சனியன் சகடை அறிவாளோடு துரத்த, மரத்திருந்த கை வெட்டப்பட்டதாக அவன் எண்ண என எல்லாம் சேர்ந்து எங்கள் உறக்கத்துக்கு வேட்டு வைத்து விட்டது.

எல்லாம் சரி இப்போது உனக்கு என்ன பிரச்சினை என்று கேட்கிறீர்கள் தானே? இருங்கள் கொசுவத்தி இன்னும் மீதமிருக்கிறது.

திருமணமான புதிதில் பெங்களூருக்கு மனைவியை அழைத்து வந்திருந்த முதல் ஞாயிற்றுக்கிழமை. பேச்சுலர் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட சமையல் கலையை மனைவிக்கு காட்டி அசத்த வேண்டும் என்று முடிவு செய்து, அதிகாலையில் அவள் உறங்கிக் கொண்டிருக்க, நான் மட்டும் கறிக்கடைக்கு ஆட்டு இறைச்சி வாங்கச் சென்றேன்.

எப்போதுமே கிழட்டு ஆட்டுக்கறியைப் போட்டு ஏமாற்றி விடும் அண்ணாச்சி கடையில் அன்று சில குட்டி ஆடுகள் கட்டப் பட்டிருந்தன.

"என்ன அண்ணாச்சி குட்டிங்க எல்லாம் புதுசா இருக்கு?"

"என்ன பண்றது தம்பி கெழடுங்கள எவன் பாக்கறான்? நீ கூடப் பாரு குட்டிங்களப் பாத்ததும்தான் நம்ம ஏரியாவுக்கு வர்ற, இல்லைன்னா அங்கல்ல போயிடுவ?" என்று எதிரிலிருந்த கன்னடக் கடையை காண்பித்தார்.

"அத வுடுங்க அண்ணாச்சி இனிமே எப்பவுமே உங்ககிட்டதான் பிசினஸ்" என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக் குட்டியின் கால்கள், வயிறு, தலை என்று ஒவ்வொன்றாகப் பார்த்ததும் என்னுள்ளிருந்த சமையல்காரர் விழித்துக் கொண்டார்.

"அண்ணாச்சி, கால் ரெண்டையும் வெட்டி கருக்கி பாயா வெக்கற மாதிரி பக்குவமாக் குடுங்க. அப்படியே கொடல உருவி நல்லா சுத்தம் பண்ணி போட்டி வறுவலுக்கு பொடிப் பொடியா வெட்டி ஒரு அரைக் கிலோ குடுங்க"

குட்டியின் தலையை லேசாகத் தடவியபடி  "அண்ணாச்சி, தலையும் சூப்பரா இருக்கு. தலக்கறி ஒரு கிலோவும் கூடப் போட்டுருங்க" என்று சொல்லித் திரும்பியவன் முகத்தில் சடாரென ஒரு குத்து விழுந்தது.

என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள் சரமாரியாக உடலெங்கும் அடி விழுந்தது.

"அடப்பாவி மனுஷா என் வாழ்க்கையே பாழாப் போச்சே..! எவளோ ஒரு குட்டிக்காக என்னோட கால வெட்டி கொடல உருவற அளவுக்குப் போயிட்டியேடா படுபாவி"

விளக்கம் சொல்லவே விடாமல் படுக்கையிலேயே என்னை மொத்திய மனைவிக்கு "அய்யோ அது ஆட்டுக்குட்டி, பொண்ணு இல்ல" என்று புரிய வைப்பதற்குள் ரத்தம் சிந்த வேண்டியிருந்தது.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, திருமணத்தைக் காரணம் காட்டி அலுவலகத் தொல்லையிலிருந்து தப்பி, சில வருடங்களாக நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தேன்.

அப்புறம் என்ன ஒழுங்கா தூங்க வேண்டியதுதானே என்கிறீர்களா? கோபப்படாதீர்கள், இப்போது புதிதாக ஒரு பிரச்சினை முளைத்திருக்கிறது.

சில மாதங்கள் முன்பு பதிவு எழுத ஆரம்பித்தபோது அவ்வப்போது உளற ஆரம்பித்தவன், இந்த ஒரு வாரமாய் இரவில் தமிழ்மணம், தமிழிஷ், தனிமையின் இசை, தீராத பக்கங்கள், தேவியர் இல்லம், கசியும் மௌனம், வாழ்க்கை வாழ்வதற்கே என்று இரவெல்லாம் ஏதேதோ அவளுக்குத் தெரியாத தமிழ் படங்களின் பெயர்களை கண்டபடி உளறுகிறேனாம்.

எனவே நண்பர்களே, எந்த நொடியிலும் நான் அடி வாங்கி ஆஸ்பத்திரி செல்லும் அபாயமிருக்கிறது. எனக்காக உங்கள் சாமிகளிடமெல்லாம் வேண்டிக் கொள்ளுங்கள்.

Wednesday, November 4, 2009

மணலும் நுரையும்..




"ஒரு வாரம் விடுப்பு வேண்டும் தாவூத், மணிலா செல்கிறேன்" அறையினுள் நுழைந்த மேரியின் கலங்கிய கண்களை நோக்கியதுமே எனக்குள்ளும் ஏதோ கலங்கியது.


"என்ன விஷயம்?"


"என் மூத்த மகள் நேற்று இரவு கத்தியால் மணிக்கட்டை கீறிக் கொண்டாளாம். மருத்துவமனையில் இருப்பதாய் அம்மா தொலைபேசினாள்"


"அவள் கல்லூரியில் பயில்கிறாளல்லவா? என்ன காரணமென்று தெரிந்ததா?"


"காதல் தோல்வியாம்..... இப்பொழுது மூன்று மாதம் வேறு" தொடர்ந்து உரையாட இயலாமல் வார்த்தைகள் வருத்தமாய் வெளிவந்தன.


"ஓ... காதல்.." பெருமூச்சுடன் மனமின்றி அவளுக்கு விடை கொடுத்தேன்.


அறையை விட்டு அவள் அகன்றதும் ஏதோ ஒரு வெறுமை உள்ளத்தில் படர்ந்தது.


---------------


மேரிக்கு நாற்பத்தைந்து வயதுதான் ஆகிறது. என்னை விட நான்கு வயது இளையவள். நிறுவனத்தின் பல முக்கிய ஆவணங்களைப் பாதுகாத்தல், வாடிக்கையாளர்களுடனான என்னுடைய சந்திப்புகளைத் திட்டமிடுதல் மற்றும் மனித வள மேம்பாட்டு துறையையும் இணைத்து கவனிக்க ஒரு அனுபவமுள்ள ஆளைத் தேடிக் கொண்டிருந்தேன்.


பெரும்பாலும் இந்தியர்கள் இருந்த என் அலுவலகத்தில் ஏனோ இந்தப் பணிக்கும் ஒரு இந்தியரையே நியமிக்க மனம் ஒப்பவில்லை. முதல் காரணம் அவர்களின் ஒற்றுமையின்மை, மற்றொன்று அவர்களின் பொறாமை உணர்வு.


நூறு கோடி மக்கள் நூறு மொழிகளைப் பேசிக்கொண்டு ஒரே நாடு என்று என்னதான் பெருமையாக சொல்லி திரிந்தாலும், வட இந்தியன், மலையாளி, தமிழன், தெலுங்கன் என்று பல குழுக்களாகத் தான் பணியிலும் இருக்கிறார்கள்.


அது மட்டுமின்றி ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்கு ஏற்படும் பொறாமை, இவர்கள் இருவரையும் வெறுக்கும் மலையாளி,  தென்னிந்தியர்களின் மீதான வட இந்தியர்களின் பொறாமை என இவர்களின் தனிப்பட்ட குணங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை மட்டுப் படுத்தினாலும், இவ்வளவு குறைந்த ஊதியத்திற்கு இந்தியர்களையும் பிலிப்பினோக்களையும் விட்டால் படித்த வேறு நாட்டவர் கிடைப்பதில்லை.


ஆனால் இந்த பிலிப்பினோக்களின் குணம் இந்தியர்களைப் போன்றதல்ல. அவர்கள் நாட்டிலும் பல மொழிகள் இருந்தாலும் இங்கே அவர்களிடம் இருப்பது போன்ற ஒற்றுமையை வேறு எந்த இனத்திலும் காண முடியாது.


வந்து குவிந்திருந்த நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து சல்லடை போட்டு சிலவற்றை தேர்வு செய்தேன். அவற்றில் மேரியின் அனுபவங்களும் பின்புலமும் நேர்காணலில் அவளின் நேர்மையான அணுகுமுறையும் என்னைக் கவர்ந்ததால் அவளையே இப்பணிக்கு நியமித்தேன்.


என் எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் விதமாக அவளின் சுறுசுறுப்பு, அரவணைப்பான, அக்கறையான பேச்சு, எப்போதுமே மலர்ந்த முகமென அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் அவளைப் பிடித்துவிட்டது.


ஒரு வங்கியின் உயர் பதவியில் பல ஆண்டுகள் பணி புரிந்தவள், விவாகரத்தாகி பிலிப்பைன்சில் சுயமாய் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தவள், வியாபாரத்தில் திடீரென ஏற்பட்ட கடன்களால் மூன்று பிள்ளைகளையும் அவள் வயதான அம்மாவின் பொறுப்பில் விட்டுவிட்டு இங்கிருந்து மாதாமாதம் அவர்கள் கல்விச் செலவிற்குப் பணம் அனுப்புகிறாள்.


"இந்த ஆண்டு என் மூத்த மகள் பட்டதாரியானதும் அவளையும் இங்கு அமீரகத்துக்கு அழைத்து வந்து விடுவேன். எங்கள் ஊரில் வெளிநாட்டு பிலிப்பினோக்களுக்கு தான் மரியாதை அதிகம்" என்று அவ்வப்போது புலம்புவாள்.


இன்று என்னவென்றால் அந்த மகள் கையை அறுத்துக் கொண்டு நிற்கிறாள்.


-----------


இதோ, நேற்றோடு லெபனானிலிருந்து இந்த நாட்டுக்கு வந்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டது. இஸ்ரேலிய குண்டு வீச்சில் இறந்த பெற்றோரையும் மூத்த சகோதரனையும் அடக்கம் செய்து விட்டுத் தனியனாய் நான் நேசித்த பனி மலைகளையும்,  அலைந்து திரிந்த பெய்ரூட் நகரத் தெருக்களையும் விட்டுப் பிரியும் போதுதான் கடைசியாக வாழ்வில் அழுதது. ஆனால் இங்கு வந்த பின்னர் இந்த நிறுவனம் தான் என் உயிரும் உறவுமாகிப் போனது.


மாற்றம் ஒன்றுதானே மானுட வாழ்வின் மகத்தான தத்துவம்? மேரியின் வரவுக்குப் பின்னர் என் வாழ்விலும் மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்தது. பணியில் அவளின் நேர்த்தி, சக ஊழியர்களிடத்து அன்பு, பொறுமை, பரிவு என அவளின் ஒவ்வொரு குணமும் என்னை சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கத் தொடங்கியது.


"என்ன விதமான உணர்வு இது? ஒருவேளை காதலோ? சரிதான், ஐம்பது வயதில் இது தேவையா? ஆனால் காதல் என்றாலே அன்புதானே, அன்புக்கு வயது உண்டா என்ன?"


பல நாட்கள் என்னுடன் நானே புரிந்த விவாதத்திற்குப் பிறகு முடிவு செய்தேன், இனி மீதமுள்ள நாட்கள் நாம் இணைந்து வாழலாமா என அவளிடம் கேட்டு விடலாம் என்று.


-----------------


மாலை பணி முடிந்து கிளம்பும் போது மேரியை அழைத்தேன்.


"இன்றிரவு என்னுடன் டின்னருக்கு வருகிறாயா மேரி?"


"ஓ, நிச்சயம் தாவூத். ஏதேனும் விசேஷமா?"


"ஆம் விசேஷம்தான், இன்றோடு இந்த நாட்டுக்கு வந்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது, அதற்காக ஒரு சிறிய விருந்து"


உலகின் ஒரே ஏழு நட்சத்திர விடுதியின் இருபத்தி ஏழாவது தளத்தில் உள்ள உணவகத்தில் முன்பதிவு செய்திருந்த இருக்கையில் அமர்ந்தோம்.


வெளியே அரபிக் கடலில் விளக்குகளின் வெளிச்சத்தில் ஜூமைரா தீவு கட்டிடக்கலையின் பெருமையைப் பறைசாற்றியபடி அற்புதமாய் மின்னிக் கொண்டிருந்தது.


சிறிது நேரம் எதுவும் பேசாமல் நிசப்தமாய் தொலைவில் நகர்ந்து கொண்டிருந்த கப்பலைப் பார்த்துக் கொண்டே திடீரென நினைவுக்கு வந்தவன் போல்,


"அந்த டெலிகாம் ஆடிட்டிங் ஃபைலை க்ளையண்டுக்கு அனுப்பி விட்டாயா மேரி?"


"ஹூம்.. இங்கும் அலுவலக நினைப்பு தானா? நேற்றே அனுப்பி விட்டேன் தாவூத். வேறு ஏதேனும் பேசலாமா?"


அவளே ஆரம்பித்தாள். "ஆமாம், நீங்கள் ஏன் திருமணமே செய்து கொள்ளவில்லை?"


எப்படித் துவங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தால் இப்படி நேரடியாகத் தாக்குகிறாளே.


சட்டென்று பதிலளித்தேன் "உன் போன்ற ஒரு பெண்ணை இருபது ஆண்டுகள் முன்னர் சந்தித்திருந்தால் நிச்சயம் திருமணம் செய்திருப்பேன்"


"ஹா, ஹா உலகின் அழகான பெண்கள் எல்லாம் லெபனானில்தான் பிறக்கிறார்கள், நீங்கள் என்னவென்றால் ஒரு சப்பை முகம் கொண்ட பிலிப்பினோவை திருமணம் செய்து கொண்டிருப்பேன் என்கிறீர்களே?"


"ஒரு வேளை அந்த வயதில் உடல் அழகை மட்டும்தான் விரும்பியிருப்பேனோ என்னவோ? ஆனால் இப்போது உன் உள்ளத்தையும் அதிலுள்ள எல்லையற்ற அன்பை மட்டும்தான் காதலிக்கிறேன் மேரி"


ஒரு நிமிடம் துணுக்குற்றாள். "என்ன சொல்கிறீர்கள் தாவூத்?"


"நிஜம்தான் மேரி, நான் உன்னைக் காதலிக்கத் துவங்கிவிட்டேன் என்று எண்ணுகிறேன். நாம் ஏன் வாழ்வின் மீதமுள்ள நாட்களை ஒன்றாய் கழிக்கக் கூடாது?"


"ஆனால் தாவூத்... நான வயதானவள் மூன்று வயது வந்த குழந்தைகளின் தாய். இதெல்லாம் சாத்தியமா என்று தெரியவில்லை" அவள் குரலில் லேசான நடுக்கம் தெரிந்தது.


"இதில் தவறொன்றும் இருப்பதாய் தெரியவில்லை மேரி, நானும் வயதானவன் தானே? முதுமையில் நாம் இருவரும் ஏன் துணையின்றித் தனிமையில் உழல வேண்டும்? உன்னைப் பற்றி எனக்கு முழுமையாய் தெரியும். அத்துடன் உன் பிள்ளைகளுக்கும் ஒரு நல்ல தகப்பனாய் இருப்பேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது"


"நான் சற்று யோசிக்க வேண்டும்.... நாளை காலை என் முடிவை சொல்கிறேனே தாவூத்?"


"ஒன்றும் அவசரமில்லை மேரி, பொறுமையாய் சிந்தித்து ஒரு நல்ல முடிவு எடுப்பாய் என்று நம்புகிறேன்"


வீடு திரும்பும்போது காரில் எதுவும் பேசாமல் தீவிரமான யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.


"உன் வீடு வந்துவிட்டது மேரி" இறங்கிச் சென்று அவள் புறமிருந்த கதவைத்திறந்து சொன்னேன்.


டிசம்பர் மாதக் குளிர்காற்று உடலெங்கும் ஊசி போல் குத்தியது. இந்தப் பாலையில் இப்படித்தான், கோடைக் காலங்களில் சூரியனின் வெப்பம் உடலை எரிக்கும். குளிர்காலங்களில் உடல் விறைக்குமளவு நடுங்கும்.


"ம்..ம்ம்.." சுய உணர்வுக்கு வந்தவளாய் மெலிதாய்ப் புன்னகைத்துக் கொண்டே கீழிறங்கினாள்.


அவள் முகத்தில் ஏதோ தெளிவு பிறந்தது போலிருந்தது. "எனக்கு சம்மதம் தாவூத், ஆனால் என் அம்மாவிடமும் மூத்த மகளிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறேன். நிச்சயம் இருவரும் மகிழ்வார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் அவர்கள்தான் நான் எவ்வளவு மறுத்தாலும் அடிக்கடி மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவர். என் பிள்ளைகள் என்னைவிட அன்பும் பொறுப்பும் நிறைந்தவர்கள். உங்களை அவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்"


"குட் நைட் தாவூத்"  புறங்கையில் ஒரு ஈர முத்தத்தைப் பதித்து விடை பெற்றாள் மேரி.


உயர்திணைகள், அஃறிணைகள் என அருகிலிருந்த அனைத்தும் அழகாய் இருந்த அந்த இரவு விடியவே கூடாதா என பைத்தியகாரத்தனமாய் எண்ணியது மனம்.


-----------------------


விடியலில் ஜன்னலுக்கு வெளியே சிரித்த சூரியன் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது போலிருந்தது. உற்சாகமாய் அலுவலகம் கிளம்பினேன்.


என் அறைக்குள் நுழைந்ததும் எனக்காகவே காத்திருந்தது போல் அழைப்பு மணியடித்தது.


"யெஸ் கம் இன்"


"ஒரு வாரம் விடுப்பு வேண்டும் தாவூத், மணிலா செல்ல வேண்டும்" அறையினுள் நுழைந்த மேரியின் கலங்கிய கண்களை நோக்கியதுமே எனக்குள்ளும் ஏதோ கலங்கியது.

----------------


இன்றோடு அவளைப் பிரிந்து ஒரு வாரம் ஆயிற்று. அவளிடமிருந்து எந்த விதமான தகவலும் இல்லை. அலைபேசியில் அழைத்தால் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாய் திரும்பத் திரும்ப சொல்லிற்று.


வாழ்வில் முதல் முறையாக அவளில்லாத கணங்களில் தனிமையின் கொடூரம் தாக்கத் துவங்கியது. ஹூம் அவளும் கணவனின் பிரிவுக்குப் பின்னர் இப்படித்தானே தவித்திருப்பாள்? இனி எதற்கும் கலங்காத வண்ணம் அவளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டே மின்னஞ்சலை திறந்த போது இன்ப அதிர்ச்சி, மேரி ஏதோ செய்தி அனுப்பியிருக்கிறாள். உள்ளமெங்கும் பொங்கிய உற்சாகத்தோடு அதனை திறந்தேன்.


"அன்புள்ள தாவூத்,


இவ்வளவு நாட்கள் உங்களைத் தொடர்பு கொள்ளாமல் இருந்தமைக்கு மன்னிக்கவும். மணிலாவுக்கு வந்த தினத்திலிருந்தே இங்கு நடக்கும் பல நிகழ்வுகளில் எனக்கு மகிழ்வு இல்லை. இந்த ஓராண்டில் என் பிள்ளைகளைப் பிரிந்து வெகு தொலைவு வந்து விட்டதாய் உணர்கிறேன். பணம் மட்டும் தானா வாழ்க்கை? அதற்காக ஏன் என் செல்லங்களைப் பிரிய வேண்டும்? ஒரு வேளை நான் உடன் இருந்திருந்தால் என் மகள் இப்படித் தவறான முடிவு எடுத்திருக்க மாட்டாளோ?


இனி வரும் நாட்களை அவர்களுக்காகவே கழிப்பதாய் முடிவு செய்து விட்டேன். உலகம் மிகவும் சிறியது தாவூத். என்றேனும் ஒரு நாள் அவர்களுக்கு நான் பாரமாய் மாறியதாய் உணர்ந்தால் நிச்சயம் உங்களைத் தேடி வருவேன். அப்போதும் என்னை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்,


-மேரி"


எவ்வளவு முயன்றும் விழிகளில் ஈரம் படர்வதை தவிர்க்க இயலவில்லை. ஏனோ லெபனானின் பனி மலைகளும், பெய்ரூட்டின் தெருக்களும் மீண்டும் நினைவுக்கு வந்தன.


--------------------


I am forever walking upon these shores,
Between the sand and the foam,
The high tide will erase my foot-prints, 
And the wind will blow away the foam. 
But the sea and the shore will remain Forever.
-Khalil Gibran

Tuesday, November 3, 2009

நடனங்கள் - வாழ்வின் கொண்டாட்டம்








இசை மற்றும் நடனங்களின் தீவிர ரசிகனாயிருந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் இயல்பாய் உடனிருந்த கூச்ச சுபாவமும் தாழ்வு மனப்பான்மையும் ஒரு பார்வையாளன் அளவிலேயே என்னை நிறுத்தி விட்டது. ஆனால் இந்த மென்பொருள் வாழ்க்கை என் பல பழக்க வழக்கங்களைப் புரட்டிப்போட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும்.

எங்கள் ஊரில் திருவிழாக்களில் தீர்த்தம் எடுக்கும் போது, உள்ளூர் ஜிக்காட்டக் குழுவினரின் பறையடிக்கேற்ற நடனத்திற்கு பார்வையாளர்களின் உடலும் கட்டுப்பாடிழந்து தானாய் ஆடும். அதே போன்ற ஒரு உணர்வைக் கொடுத்து என்னை ஆட வைத்தன மும்பையின் நடன விடுதிகள்.

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மட்டும் எந்தப் ப்ராஜெக்டில் எங்கிருந்தாலும் மாலை எட்டு மணிக்குள் கிழக்கு அந்தேரியிலுள்ள எங்கள் அலுவலக கெஸ்ட் ஹவுசில் அனைவரும் கூடி விடுவர். ஆளுக்கொரு வேலையாய் பிரித்துக் கொண்டு சைட் டிஷ் வாங்கி வர ஒரு குழுவும், சரக்கு வாங்க ஒரு குழுவும் செல்ல, வீட்டை சுத்தப் படுத்தி ஹாலில் பிட்ச் போட்டு ஒன்பது மணியளவில் ஆட்டம் துவங்கி விடும்.

ஒவ்வொருவரும் அவனவன் மேனேஜரைத் திட்டிவிட்டு நிறுவனத்தையும் மாறி மாறித் திட்ட ஆரம்பிப்பார்கள்.

"மச்சான் நம்ம கம்பெனியில ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்டே சரியில்லடா, இந்த இஷ்யூவ எப்படி ஹேண்டில் பண்ணனும் தெரியுமா?" என்று மப்பில் அவனவன் கொடுக்கும் ஐடியாவை மட்டும் நிர்வாகம் கேட்டால் நிறுவனம் ஒரே நாளில் 'Fortune 100'க்குள் வந்து விடுமென்று தோன்றும்.

"சரி சரி விடுங்கடா, இவனுங்க திருந்தவே மாட்டனுக. வேற ஏதாவது பேசுங்கடா"

"இந்த டெஸ்டிங் டீம்ல இருகுக்கற ப்ரியா படுத்தறாடா, என்னால தூங்கவே முடியல"

"ஏண்டா ஏதாவது பத்திகிச்சா?"

"ஆமாண்டா, பத்திகிட்டு எரியுது. நீவேற, தினமும் ஏதாவது புதுசு புதுசா பக் கண்டு புடிச்சு என்ன வாதிக்கறாடா. ஒண்ணு மட்டும் சொல்றண்டா மச்சி, எவ்வளோ சம்பளம் வாங்குனாலும் சத்தியமா டெஸ்டிங்குல இருக்கற பொண்ண மட்டும் கட்டிக்கவே மாட்டேன்"

பேச்சு திசை மாறி எங்கெங்கோ சுற்றி விட்டு டான்ஸ் பார் போலாமாடா? என்று வந்து நிற்கும்.

அனைவரின் பேராதரவோடு பனிரெண்டு மணியளவில் ஒரு சிலர் மட்டையாகிவிட, மீதமுள்ளவர்கள் ஆளாளுக்கு ஒரு டான்ஸ் பார் பெயரைச் சொல்ல, 6 -7 பேரை ஏற்றிக் கொண்டு இரண்டு ஆட்டோக்கள் கிளம்பும்.

பெரும்பாலானவற்றில் உள்ளே இடமின்றி பவுன்சர்களால் விரட்டியடிக்கப் பட்டு நொந்து போய் வீடு திரும்பலாமென எண்ணும்போது ஏதேனும் ஒரு மொக்கை ஃபிகர்கள் உள்ள டான்ஸ் பாரில் இடம் கிடைக்கும். வெறும் நான்கு பியர்களை மட்டும் வாங்கிக் கொண்டு, அரையிருட்டில் உச்சபட்ச ஒலியில் இந்திப் பாடல்களுக்கு நம்ம ஊர் குத்தாட்ட நடனம் ஆட ஆரம்பிப்போம். சரக்கடித்த பின்பு வெட்கமாவது கூச்சமாவது?


பவுன்சர்கள் அவ்வப்போது வந்து "ஔர் குச் சாயியே" என்று கழுத்தைப் பிடிப்பது போல் கேட்டாலும் சரி, ஃபிகர்கள் "கம்பெனி சாயியே?" என்று கேட்டாலும் சரி, எதற்கும் மசியாமல் அவை பின்னால் "தூத்தேறி" என்று துப்புவது காதில் விழுந்தாலும் ஆட்டம் நிற்காது.

அதிகாலை நான்கரை, ஐந்து மணிவரை ஆடிக் களைத்து "கடைய சாத்தறோம் கெளம்புங்கடா" என்று பவுன்சர்கள் விரட்டிய பின்னர்தான் வெளியே வருவோம்.

மாதக் கடைசியில் எவனாவது மன வருத்தத்தில் இருந்தால், ஹாலிலேயே இரண்டு மூன்று பெக்குகளுடன் ஏதேனும் குத்துப்பாடல் டிவிடியில் ஓட, எங்கள் நடனம் ஆரம்பமாகி விடும்.

ஆனால் மும்பைக்குப் பின்னர் அதே போன்று வேறு எங்கும் நடனமாடும் வாய்ப்பும் நண்பர்கள் குழுவும் ஏனோ அமையவில்லை. சில வருடங்களுக்குப் பின்னர் சிங்கையில் இருந்த போது மீண்டும் அதே போல் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை, ஆனால் இம்முறை

"அண்ணனுக்கு ஜே..,
 காளையனுக்கு ஜே..
பொதுவாக எம்மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்துபுட்டா சிங்கம்"

என்று தமிழ்ப் பாடலை அசோகா நடன விடுதியில் கேட்டவுடன், உற்சாகம் பிய்த்துக் கொண்டு உடலும் உள்ளமும் ஆடத்துவங்கியது. ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அங்கு பலர் குடும்பத்துடன் வந்து ஆடிக்கொண்டிருந்தனர்.

எல்லாம் சரி, இப்போதெல்லாம் நம் ஊரில் பல குழந்தைகள் தொலைக்காட்சியில் குத்துப் பாடல்களைக் கேட்டவுடன் ஆட ஆரம்பித்து விடுகின்றனவாம்.

நண்பர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது புலம்பினார், அவரின்  இரண்டரை வயதுப் பெண், குழந்தைகளின் காவியமான கந்தசாமியில் வரும் "ஏம்பேரு.. மீனாகுமாரி" என்ற பாடலைக் கேட்டால் எந்த இடமாக இருப்பினும் நின்று ஆட ஆரம்பித்து விடுகிறாளாம்.

"இதுக்கெல்லாம் கவலப் படுறீங்களே, நானெல்லாம் இருபத்தஞ்சு வயசுக்குப் பின்னாடிதான ஆடவே ஆரம்பிச்சேன். உங்க பொண்ணு இப்பவே டான்ஸ்ல பின்னறாளே?"

"அதில்லைங்க, வேற ஏதாவது பாட்டா இருந்தாப் பரவாயில்லை, ஆனா அதுல வர்ற மாதிரியே ஆடுறா, அதுதான் பிரச்சினை" என்றார்.

ஹூம்.. குழந்தைகளுக்குத் தெரியுமா எது நல்லது கெட்டது என்று? இசையும் நடனமும் இணைந்து வாழ்வைக் கொண்டாடும் வயது அல்லவா அது?

இங்கே நம் ஊரில்தான் இப்படியா என்றால், இந்த சாம்பா நடன அழகியின் குஜால் ஆட்டத்தைப் பாருங்கள் எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கிறதென்று.



பிஞ்சுகளே இந்த ஆட்டம் ஆடும் போது உங்களுக்கும் நடனமாட வேண்டும் போலிருக்கிறதா? கூச்சப் படாதீர்கள். வீட்டில் யாருமில்லையென்றால் கதவை மூடிவிட்டு உங்களுக்குப் பிடித்த பாடலைப் போட்டு ஆரம்பியுங்களேன். கலைகளுக்கும் கொண்டாட்டத்துக்கும் வயது ஒரு தடையா என்ன?


Monday, November 2, 2009

சில அதிர்ச்சிகளும் பல ஆச்சரியங்களும்



அடுத்த வினாடியில் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் ஏராளம் என்றாலும் வாழ்க்கை எவ்வித எதிர்பார்ப்புமின்றி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆயினும் அவ்வப்போது நினைவுகளில் இளைப்பாறும் பொழுது, சற்றுப் பின் நோக்கினால் அந்த ஆச்சரியங்கள் எப்பொழுதும் மகிழ்வையும், அதிர்ச்சிகள் பல அனுபவங்களையுமே கற்றுக் கொடுத்துள்ளன.

நினைவில் தெரிந்த முதல் வியப்பு எங்கள் வீட்டுக் கோழி இடும் முட்டைகளும் அது பொரிக்கும் குஞ்சுகளும். ஒவ்வொரு முறை அது அடை காக்கும் போதும் முட்டையை உடைத்துக் கொண்டு குஞ்சுகள் வெளிவருவதைக் காணும் ஆவலில் தினமும் மாலை பள்ளியில் இருந்து வந்து கூடையைத் திறந்து பார்ப்பேன்.

எப்போதும் என்னிடம் அன்பாக இருக்கும் தாய்க்கோழி, குஞ்சுகள் பிறந்த அன்று அனைத்தையும் தன் இறகுகளுக்குள் ஒளித்துக் கொண்டு என்னை முறைத்துப் பார்க்கும். குறைந்தது நான்கு ஐந்து நாட்கள் யாரையும் அதனிடம் நெருங்கவே விடாது.

 சில தினங்களில் அவை அனைத்தும் என் காலடியில் சுற்ற ஆரம்பித்ததும் பஞ்சு போல் மென்மையான கோழிக் குஞ்சுகளை இரண்டு கைகளுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்து நேரம் போவதே தெரியாமல் விளையாடிக் கொண்டிருப்பேன்.

வெளியே மேயச் சென்றாலும் அவை வீட்டிலிருந்து வெகு தூரம் செல்லாது. பின்னால் உள்ள சோளக்காடுதான் அதிகபட்ச தொலைவு. அம்மா சற்று உரக்கக் கூவினால் எங்கிருந்தாலும் வீட்டு முற்றத்துக்கு அனைத்தும் ஓடோடி வந்து விடும். மாலை ஆறு மணியானால் வெளியே தொட்டியில் உள்ள நீரைப் பருகிவிட்டு தானாகச் சென்று கூட்டில் அடைந்து விடும்.

ஒரு கோடை விடுமுறை நாளில் மதியம் பனிரெண்டு மணியளவில் மிகவும் தளர்ந்து நடந்து வந்தது தாய்க்கோழி. வழியிலேயே இரண்டு குஞ்சுகள் நடக்க முடியாமல் கீழே விழுந்து மரித்தன. உடனிருந்த சில குஞ்சுகளையும் காணவில்லை.  தாய்க்கோழி வேதனையுடன் எங்களைப் பார்த்துக் கொண்டே வாயைத் திறந்தபடி மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்தது.

அம்மா அதனை மடியில் வைத்து ஒரு கிண்ணத்திலிருந்த தண்ணீரைப் புகட்ட முயற்சித்தார், ஆனால் எல்லா நீரும் வெளியே வடிந்தது. சில நிமிடங்களில் அம்மாவின் மடியிலேயே நூற்றுக்கணக்கான குஞ்சுகளைப் பெற்ற அந்த தாய்க்கோழியின் துடிப்பு அடங்கியது.

மருந்து அடித்திருந்த விதை சோளங்களைத் தின்று ஒட்டுமொத்தமாய் எங்களை விட்டு அந்தக் குடும்பம் பிரிந்ததுதான் என் நினைவில் தெரிந்த முதல் அதிர்ச்சி, துயரம், இழப்பு.

அதன் பின்னர் ஒவ்வொரு கால கட்டங்களிலும் வியந்த, அதிர்ந்த நிகழ்வுகள் பலப்பல.

பள்ளி நாட்களில் ஆசிரியர்களால் பாராட்டப்படும் போது ஏற்படும் மகிழ்வு, காரணமே இல்லாமல் வெறுத்து ஒதுக்கிய சில ஆசிரியர்களால ஏற்படும் அதிர்ச்சிகள்.

படிப்பு மற்றும் விளையாட்டில் செய்த சிறு சிறு சாதனைகளுக்கு நண்பர்கள், உறவினர்களின் பாராட்டுக்கள், பரிசுகள்.

பதின்ம வயதுகளில் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள், குரல் உடைந்து, மீசை முளைத்து, சம வயதொத்த பெண்களை நோக்கும்போது ஏற்பட்ட கிளர்ச்சிகள்.

பள்ளியில் அனைவருக்கும் பிடித்த பரிமளா டீச்சரின் தற்கொலை, தாத்தா, பாட்டி, பெரியப்பா மற்றும் ஒன்று விட்ட அண்ணன் ஆகியோரின் இழப்பு.

கல்லூரி நாட்களில் எங்கிருந்தோ வந்து எதனாலோ என்னைப் பிடித்து இன்று வரை தொடரும் நண்பர்களின் அன்பு, நட்பு.

பணியில் சேர்ந்த முதல் மாத சம்பளம், அதன் நினைவாய் வாங்கிய பொருள். என் உழைப்பில் வாங்கிய ஸ்ப்ளெண்டரை, சென்னை மாநகரத் தெருக்களில் ஓட்டிச் சென்ற நாள்.

இவை அனைத்தும் என் தனிப்பட்ட வாழ்வின் சில நிகழ்வுகள் எனினும் இதே காலங்களில் நிகழ்ந்த பல்வேறு சமூக நிகழ்வுகளின் தாக்கங்கள் ஏற்படுத்திய வியப்புகளும், வலிகளும் வேதனைகளும் என ஒவ்வொரு நாளும் வாழ்க்கை அதன் பாடங்களை கற்பித்துக் கொண்டே இருக்கிறது.

உலகின் உயரத்தில் நான் மட்டும் இருப்பது போன்றே கூனிக்குறுகி ஒரு இருண்ட குகையிலும் இருப்பதாய் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். பணி நிமித்தமாய் பல நகரங்களில் தனியனாய் உழன்ற போது அந்த இருண்ட குகையின் வெளிச்சமாய் வந்தது இணையமும், தமிழ் வலைப்பதிவுகளும்.

அதுவரை முகமறியா நட்பில் ஒரு போதும் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. ஆனால் இன்று இணைய நண்பர்களால் நிகழ்ந்த பல வாழ்வியல் மாற்றங்கள் என்னை வாழ்வின் அடுத்த தளத்திற்கு நகர்த்தியுள்ளதை நிச்சயம் மறுக்க முடியாது.


உறங்க நேரமில்லாக் கடும் பணிச்சுமையின் இடையே கிடைத்த மற்றுமொரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தமிழ்மணத்தின் இந்த அங்கீகாரம்.


ஒரு வாசகனாய் இருந்தபோது கிடைத்த அனுபவங்களும் ஆச்சரியங்களும் ஏனோ எழுதத் துவங்கிய பின்னர் கிட்டவில்லை. இருப்பினும் இதோ மீண்டும் ஒருமுறை வாழ்வின் இருண்ட குகையிலிருந்து உலகின் உயரத்திற்கு மனம் செல்கிறது, உங்களின் அன்பையும் ஆதரவையும் நட்பையும் எதிர்நோக்கி.

Thursday, October 15, 2009

என்ன மனிதர்கள் இவர்கள்?




2001ம் ஆண்டு ஜூன் முப்பதாம் நாள் நள்ளிரவு அந்த சம்பவம் நடந்ததை அறிந்த எங்கள் வீடே ஏதோ இழவு வீடு போலிருந்தது. செய்தியைக் கேட்டவுடனும் அதைப் பார்த்த கணத்திலிருந்தும் அப்பா யாரிடமும் பேசவில்லை, அம்மாவின் கண்களில் தொடர்ந்து கண்ணீர், எனக்கோ உள்ளத்தில் ஒரு இனம் புரியாத வலி. ஏனோ அவரை நாங்கள் வேற்று மனிதராகப் பார்த்ததே இல்லை. அவரின் வெற்றிகள், தோல்விகள், வலிகள், வேதனைகள் எல்லாம் எங்களுக்கே நிகழ்வது போன்றே எண்ணி அவர் மேல் மதிப்பு வைத்திருந்தோம். அந்த நிகழ்வுக்கு ஒரு மாதம் முன்புதான் இறந்திருந்த என் தாத்தாவுக்கும் அவருக்கும் ஒரே வயது.


அவமானத்தால் கூனிக் குறுகியிருந்த நாங்கள், மறுநாள் காலையில் சிறை வாசலில் அவர் அமர்ந்ததைக் கண்டதும் மேலும் உடைந்து போனோம். என்ன மனிதர்கள் இவர்கள்? மனிதாபிமானமே இல்லையா? காலம் இவர்களுக்கு நிச்சயம் பதில் சொல்லும் என்று நான் காண்போரிடமெல்லாம் குமுறிக் கொண்டிருந்தேன்.


ஆனால் அதே காலம் கடந்த சில ஆண்டுகளாய் வேறு விதமாய் பதில் சொல்லியது. அவரின் சுயமரியாதையையும், மொழிப்பற்றையும் ஆளுமையையும் எப்போதுமே சிலாகித்துக் கொண்டிருந்த நாங்கள், அவரின் கோழைத்தனத்தையும் சுயநலத்தையும் தினம் தினம் பார்க்கும்போதும் படிக்கும்போதும் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கித்தான் போனோம். எந்த மொழியை, மக்களை வைத்துப் பிழைப்பு நடத்துகிறாரோ, அவர்கள் இன்று முட்கம்பிகளின் பின்னால் கையேந்தும் அவலத்தையும் கண்டு மனமிரங்காமல் இழவு வீட்டில் விருதும் விருந்தும் கொடுத்து, எடுத்துக் கொண்டாடுகிறார். கொன்று குவித்த அரக்கனுக்குப் பொன்னாடை வேறு.


எந்தவொரு நாட்டவன் அல்லது மாநிலத்தவனிடம் அளவளாவும் போதும் என் இனத்தின் பெருமைகளை மாய்ந்து மாய்ந்து சொல்வதில் எனக்கு அவ்வளவு ஆனந்தம். ஆனால், இனிப் பெருமை பேச என்ன இருக்கிறது? இப்போதெல்லாம் வெட்கித் தலைகுனிந்து நிற்கிறேன் விடையேதுமின்றி.

என்ன மனிதர்கள் இவர்கள்?

எரிமலையும் மனக்குமுறலும்

ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய...