2001ம் ஆண்டு ஜூன் முப்பதாம் நாள் நள்ளிரவு அந்த சம்பவம் நடந்ததை அறிந்த எங்கள் வீடே ஏதோ இழவு வீடு போலிருந்தது. செய்தியைக் கேட்டவுடனும் அதைப் பார்த்த கணத்திலிருந்தும் அப்பா யாரிடமும் பேசவில்லை, அம்மாவின் கண்களில் தொடர்ந்து கண்ணீர், எனக்கோ உள்ளத்தில் ஒரு இனம் புரியாத வலி. ஏனோ அவரை நாங்கள் வேற்று மனிதராகப் பார்த்ததே இல்லை. அவரின் வெற்றிகள், தோல்விகள், வலிகள், வேதனைகள் எல்லாம் எங்களுக்கே நிகழ்வது போன்றே எண்ணி அவர் மேல் மதிப்பு வைத்திருந்தோம். அந்த நிகழ்வுக்கு ஒரு மாதம் முன்புதான் இறந்திருந்த என் தாத்தாவுக்கும் அவருக்கும் ஒரே வயது.
அவமானத்தால் கூனிக் குறுகியிருந்த நாங்கள், மறுநாள் காலையில் சிறை வாசலில் அவர் அமர்ந்ததைக் கண்டதும் மேலும் உடைந்து போனோம். என்ன மனிதர்கள் இவர்கள்? மனிதாபிமானமே இல்லையா? காலம் இவர்களுக்கு நிச்சயம் பதில் சொல்லும் என்று நான் காண்போரிடமெல்லாம் குமுறிக் கொண்டிருந்தேன்.
ஆனால் அதே காலம் கடந்த சில ஆண்டுகளாய் வேறு விதமாய் பதில் சொல்லியது. அவரின் சுயமரியாதையையும், மொழிப்பற்றையும் ஆளுமையையும் எப்போதுமே சிலாகித்துக் கொண்டிருந்த நாங்கள், அவரின் கோழைத்தனத்தையும் சுயநலத்தையும் தினம் தினம் பார்க்கும்போதும் படிக்கும்போதும் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கித்தான் போனோம். எந்த மொழியை, மக்களை வைத்துப் பிழைப்பு நடத்துகிறாரோ, அவர்கள் இன்று முட்கம்பிகளின் பின்னால் கையேந்தும் அவலத்தையும் கண்டு மனமிரங்காமல் இழவு வீட்டில் விருதும் விருந்தும் கொடுத்து, எடுத்துக் கொண்டாடுகிறார். கொன்று குவித்த அரக்கனுக்குப் பொன்னாடை வேறு.
எந்தவொரு நாட்டவன் அல்லது மாநிலத்தவனிடம் அளவளாவும் போதும் என் இனத்தின் பெருமைகளை மாய்ந்து மாய்ந்து சொல்வதில் எனக்கு அவ்வளவு ஆனந்தம். ஆனால், இனிப் பெருமை பேச என்ன இருக்கிறது? இப்போதெல்லாம் வெட்கித் தலைகுனிந்து நிற்கிறேன் விடையேதுமின்றி.
என்ன மனிதர்கள் இவர்கள்?