Thursday, November 5, 2009

தமிழ்மணம், தலைக்கறி, தனிமையின் இசை..





ஹூம்.. எத்தனை முறை மருத்துவர்களை சென்று பார்த்தாலும் இந்த தூக்கத்தில் உளறும் வியாதி மட்டும் நிற்கவே மாட்டேன் என்கிறது. எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் ஒன்றையே சொல்கிறார்கள்.

"நைட்டு ரொம்ப நேரம் கண்ணு முழிக்காதீங்க. ஒரு பத்து மணிக்கே தூங்கிடுங்க. மனச எப்பவுமே ரிலாக்ஸா வச்சுக்கங்க. இதுக்கு மருந்தெல்லாம் ஒண்ணியும் கெடயாது. அப்புறம் முக்கியமா ஆபீஸ்ல தூங்காதீங்க. பகல்ல முழிச்சிருந்தா தான் நைட்டு ஒழுங்கா தூக்கம் வரும்" என்று அரதப் பழசான ஜோக்கை வேறு சொல்லி எரிச்சலூட்டுகிறார்கள்.

நாம் என்ன அரசு அலுவலகத்திலா வேலை செய்கிறோம்? மென்பொருள் துறையில் பத்து மணிக்கே தூங்குவதாவது? சரி, எப்படியாவது செயல்படுத்தலாம் என்று முயற்சித்து ஒருநாள் இரவு ஒன்பதரை மணிக்கு கண்ணயர்ந்தேன். நள்ளிரவு சரியாக ஒரு மணியளவில் மொபைல் கதறத் துவங்கியது. ச்சே, என்ன கொடுமடா இது என்று போனை எடுத்தால் டீம் மேட் அமெரிக்காவிலிருந்து அலறுகிறான்.

"மச்சான், பயங்கர சாணிடா. உன்னோட மாட்யூல் கவுந்துருச்சு. கஸ்டமர் இன்னைக்கு இங்கயே என்னப் பொதச்சுருவான்னு நெனக்கிறேன். உடனே லாகின் பண்ணுடா"

ஏன் மொபைலை அணைத்து விட்டுத் தூங்கக் கூடாது என்று கேட்பீர்கள். அப்படி ஒரு நாள் செய்ததால்தான் நிறுவனமே அவர்கள் செலவில் ஒரு கனெக்ஷனையும் வாங்கிக் கொடுத்துவிட்டார்கள், எப்பொழுதும் ரீச்சபிளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு.

அதற்கப்புறம் எங்கே உறக்கம் வரும்? மீண்டும் அடுத்த நாள் முதல் வழக்கம் போல் கனவில் வரும் உருவங்களுடனெல்லாம் உளறத் துவங்கினேன்.

சரி இதை எதற்கு இங்கே சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது, அதற்குமுன் நான் கண்ட சில அனுபவங்களையும் உங்களிடம் சொல்கிறேன், அதன் பிறகுதான் அதன் விபரீதத்தை உணர்வீர்கள்.

சென்னையில் நைனா வீட்டில் பேச்சுலராக குடியிருந்தபோது நிகழ்ந்த சம்பவங்கள் இவை. நைனா வீட்டைப் பற்றி இன்னொரு இடுகையில் சொல்கிறேன் இப்போது இந்தக் கொடுமையை கேளுங்கள்.

நண்பன் ஒருவன் டொக்டெர் விஜயின் தீவிர ரசிகன். எனக்கும் அவரின் நடனம் பிடிக்கும் என்றாலும் ஒரு அளவு இருக்கிறதல்லவா? ஆனால் அவன் ஒரு ரசிகன் என்பதை விட வெறியன் என்றே சொல்ல வேண்டும். டொக்டரைப் போல நடனமாட வேண்டும் என்பதற்காக வாங்கிய சம்பளத்தை அப்படியே ஜான் ப்ரிட்டோ நடனப்பள்ளியில் மாதாமாதம் ஒன்றாம் தேதி கொண்டு போய் கொட்டினான்.

மாலை நேரமானால் அவன்தான் எங்களின் பொழுதுபோக்கு. ஏதேனும் ஒரு குத்துப் பாடலை டிவிடியில் போட்டுவிட்டு அவன் தலைவனைப் போலவே ஒரு ஸ்டெப் கூட மாறாமல் ஆட ஆரம்பித்து விடுவான். இதில் என்ன பிரச்சினை என்கிறீர்களா?

சில நாட்கள் நள்ளிரவில் திடீரென்று பாடிக் கொண்டே ஆட ஆரம்பித்து விடுவான். அவன் சுய நினைவோடுதான் ஆடுகிறான் என்று எண்ணி விடாதீர்கள்.

அவனின் நாராசமான குரலைக் கேட்டு திடுக்கிட்டு விழித்தால் படுக்கையிலேயே உட்கார்ந்து கொண்டே ஆடுவான். அது எப்படி முடியும் என்று கேட்காதீர்கள் அவன் உறக்கத்தில் உட்கார்ந்து கொண்டுதான் ஆடுவான். போதாக்குறைக்கு நடுநடுவே சில பன்ச் டயலாக்குகளையும் உதிர்ப்பான்.

"அரசு, வாழ்க்கை ஒரு வட்டம் மாதிரி, இங்க ஜெயிக்கறவன் தோப்பான் தோக்கறவன் ஜெயிப்பான், மலடா திருமல.." என்று தமிழ் சினிமாவின் தலையெழுத்து தத்துவங்களையும் உதிர்ப்பான்.

சரிதான், பாவம் தீவிர ரசிகன் என்று கருணை காட்டாதீர்கள். டொக்டரிடம் பிடிக்காத ஒரே விஷயம் அவரின் பன்ச் டயலாக்குகள்தான். திரையரங்கிலேயே தாங்க முடியாது. இங்கே நள்ளிரவில் ஒருவன் அதையே ஒப்பித்தால் எப்படி உங்களால் உறங்க முடியும்?

"டேய் உங்கூட ஒரே ரோதனையாப் போச்சுடா. ஏண்டா இப்படிக் கண்டபடி ஒளர்ற? பேசாமத் தூங்குடா" என்று சொன்னால்,

"நீ கூடத்தான் நேத்து ராத்திரி ஏதோ சரவணபவன்ல போயி ரெண்டு மட்டன் பிரியாணி பார்சல்னு ஒளறுன, நான் ஏதாவது சொன்னனா?" என்று என்னுடைய வீக் பாயின்டிலேயே கை வைப்பான்.

அன்றும் அப்படித்தான், ஏதோ "சனியன் சகடை, பட்டாசுப் பாண்டி, சிவகாசி" என்று உளறிக் கொண்டிருந்தவன் திடீரென்று குரலை மாற்றி,

"கொல்றாங்கப்பா, கொல்றாங்கப்பா... கைய எவனோ வெட்டிட்டாம்பா" என்று அழ ஆரம்பித்தான.

ஏற்கனவே இது போன்ற ஒரு நள்ளிரவு சம்பவத்தால் ஆடிப் போயிருந்த தமிழகத்தில் மீண்டும் அதே போன்ற ஒரு குரலைக் கேட்டால் எப்படி இருக்கும்?

அலறி அடித்து எழுந்து விளக்கைப் போட்டால், வலது கையால் இடது கையைப் பிடித்துக் கொண்டு "அய்யோ கைய வெட்டிட்டாங்கடா.. சனியன் சகட செஞ்சுட்டாண்டா" என்று உறக்கத்தில் அழுது கொண்டிருந்தான்.

அவனைப்பிடித்து உலுக்கி சுய உணர்வுக்கு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

என்ன நடந்தது என்று மெதுவான விசாரித்தால், பையன் ஒருக்களித்துப் படுத்திருந்தபோது, இடது கையை தலைக்கு அடியில் வைத்திருக்கிறான். நீண்ட நேரம் அப்படியே இருந்ததால் கையில் இரத்த ஓட்டம் தடைபட்டு மரத்துப் போயிருக்கிறது. அதே வேளையில் கனவில் டொக்டரை சனியன் சகடை அறிவாளோடு துரத்த, மரத்திருந்த கை வெட்டப்பட்டதாக அவன் எண்ண என எல்லாம் சேர்ந்து எங்கள் உறக்கத்துக்கு வேட்டு வைத்து விட்டது.

எல்லாம் சரி இப்போது உனக்கு என்ன பிரச்சினை என்று கேட்கிறீர்கள் தானே? இருங்கள் கொசுவத்தி இன்னும் மீதமிருக்கிறது.

திருமணமான புதிதில் பெங்களூருக்கு மனைவியை அழைத்து வந்திருந்த முதல் ஞாயிற்றுக்கிழமை. பேச்சுலர் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட சமையல் கலையை மனைவிக்கு காட்டி அசத்த வேண்டும் என்று முடிவு செய்து, அதிகாலையில் அவள் உறங்கிக் கொண்டிருக்க, நான் மட்டும் கறிக்கடைக்கு ஆட்டு இறைச்சி வாங்கச் சென்றேன்.

எப்போதுமே கிழட்டு ஆட்டுக்கறியைப் போட்டு ஏமாற்றி விடும் அண்ணாச்சி கடையில் அன்று சில குட்டி ஆடுகள் கட்டப் பட்டிருந்தன.

"என்ன அண்ணாச்சி குட்டிங்க எல்லாம் புதுசா இருக்கு?"

"என்ன பண்றது தம்பி கெழடுங்கள எவன் பாக்கறான்? நீ கூடப் பாரு குட்டிங்களப் பாத்ததும்தான் நம்ம ஏரியாவுக்கு வர்ற, இல்லைன்னா அங்கல்ல போயிடுவ?" என்று எதிரிலிருந்த கன்னடக் கடையை காண்பித்தார்.

"அத வுடுங்க அண்ணாச்சி இனிமே எப்பவுமே உங்ககிட்டதான் பிசினஸ்" என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக் குட்டியின் கால்கள், வயிறு, தலை என்று ஒவ்வொன்றாகப் பார்த்ததும் என்னுள்ளிருந்த சமையல்காரர் விழித்துக் கொண்டார்.

"அண்ணாச்சி, கால் ரெண்டையும் வெட்டி கருக்கி பாயா வெக்கற மாதிரி பக்குவமாக் குடுங்க. அப்படியே கொடல உருவி நல்லா சுத்தம் பண்ணி போட்டி வறுவலுக்கு பொடிப் பொடியா வெட்டி ஒரு அரைக் கிலோ குடுங்க"

குட்டியின் தலையை லேசாகத் தடவியபடி  "அண்ணாச்சி, தலையும் சூப்பரா இருக்கு. தலக்கறி ஒரு கிலோவும் கூடப் போட்டுருங்க" என்று சொல்லித் திரும்பியவன் முகத்தில் சடாரென ஒரு குத்து விழுந்தது.

என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள் சரமாரியாக உடலெங்கும் அடி விழுந்தது.

"அடப்பாவி மனுஷா என் வாழ்க்கையே பாழாப் போச்சே..! எவளோ ஒரு குட்டிக்காக என்னோட கால வெட்டி கொடல உருவற அளவுக்குப் போயிட்டியேடா படுபாவி"

விளக்கம் சொல்லவே விடாமல் படுக்கையிலேயே என்னை மொத்திய மனைவிக்கு "அய்யோ அது ஆட்டுக்குட்டி, பொண்ணு இல்ல" என்று புரிய வைப்பதற்குள் ரத்தம் சிந்த வேண்டியிருந்தது.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, திருமணத்தைக் காரணம் காட்டி அலுவலகத் தொல்லையிலிருந்து தப்பி, சில வருடங்களாக நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தேன்.

அப்புறம் என்ன ஒழுங்கா தூங்க வேண்டியதுதானே என்கிறீர்களா? கோபப்படாதீர்கள், இப்போது புதிதாக ஒரு பிரச்சினை முளைத்திருக்கிறது.

சில மாதங்கள் முன்பு பதிவு எழுத ஆரம்பித்தபோது அவ்வப்போது உளற ஆரம்பித்தவன், இந்த ஒரு வாரமாய் இரவில் தமிழ்மணம், தமிழிஷ், தனிமையின் இசை, தீராத பக்கங்கள், தேவியர் இல்லம், கசியும் மௌனம், வாழ்க்கை வாழ்வதற்கே என்று இரவெல்லாம் ஏதேதோ அவளுக்குத் தெரியாத தமிழ் படங்களின் பெயர்களை கண்டபடி உளறுகிறேனாம்.

எனவே நண்பர்களே, எந்த நொடியிலும் நான் அடி வாங்கி ஆஸ்பத்திரி செல்லும் அபாயமிருக்கிறது. எனக்காக உங்கள் சாமிகளிடமெல்லாம் வேண்டிக் கொள்ளுங்கள்.

Wednesday, November 4, 2009

மணலும் நுரையும்..




"ஒரு வாரம் விடுப்பு வேண்டும் தாவூத், மணிலா செல்கிறேன்" அறையினுள் நுழைந்த மேரியின் கலங்கிய கண்களை நோக்கியதுமே எனக்குள்ளும் ஏதோ கலங்கியது.


"என்ன விஷயம்?"


"என் மூத்த மகள் நேற்று இரவு கத்தியால் மணிக்கட்டை கீறிக் கொண்டாளாம். மருத்துவமனையில் இருப்பதாய் அம்மா தொலைபேசினாள்"


"அவள் கல்லூரியில் பயில்கிறாளல்லவா? என்ன காரணமென்று தெரிந்ததா?"


"காதல் தோல்வியாம்..... இப்பொழுது மூன்று மாதம் வேறு" தொடர்ந்து உரையாட இயலாமல் வார்த்தைகள் வருத்தமாய் வெளிவந்தன.


"ஓ... காதல்.." பெருமூச்சுடன் மனமின்றி அவளுக்கு விடை கொடுத்தேன்.


அறையை விட்டு அவள் அகன்றதும் ஏதோ ஒரு வெறுமை உள்ளத்தில் படர்ந்தது.


---------------


மேரிக்கு நாற்பத்தைந்து வயதுதான் ஆகிறது. என்னை விட நான்கு வயது இளையவள். நிறுவனத்தின் பல முக்கிய ஆவணங்களைப் பாதுகாத்தல், வாடிக்கையாளர்களுடனான என்னுடைய சந்திப்புகளைத் திட்டமிடுதல் மற்றும் மனித வள மேம்பாட்டு துறையையும் இணைத்து கவனிக்க ஒரு அனுபவமுள்ள ஆளைத் தேடிக் கொண்டிருந்தேன்.


பெரும்பாலும் இந்தியர்கள் இருந்த என் அலுவலகத்தில் ஏனோ இந்தப் பணிக்கும் ஒரு இந்தியரையே நியமிக்க மனம் ஒப்பவில்லை. முதல் காரணம் அவர்களின் ஒற்றுமையின்மை, மற்றொன்று அவர்களின் பொறாமை உணர்வு.


நூறு கோடி மக்கள் நூறு மொழிகளைப் பேசிக்கொண்டு ஒரே நாடு என்று என்னதான் பெருமையாக சொல்லி திரிந்தாலும், வட இந்தியன், மலையாளி, தமிழன், தெலுங்கன் என்று பல குழுக்களாகத் தான் பணியிலும் இருக்கிறார்கள்.


அது மட்டுமின்றி ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்கு ஏற்படும் பொறாமை, இவர்கள் இருவரையும் வெறுக்கும் மலையாளி,  தென்னிந்தியர்களின் மீதான வட இந்தியர்களின் பொறாமை என இவர்களின் தனிப்பட்ட குணங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை மட்டுப் படுத்தினாலும், இவ்வளவு குறைந்த ஊதியத்திற்கு இந்தியர்களையும் பிலிப்பினோக்களையும் விட்டால் படித்த வேறு நாட்டவர் கிடைப்பதில்லை.


ஆனால் இந்த பிலிப்பினோக்களின் குணம் இந்தியர்களைப் போன்றதல்ல. அவர்கள் நாட்டிலும் பல மொழிகள் இருந்தாலும் இங்கே அவர்களிடம் இருப்பது போன்ற ஒற்றுமையை வேறு எந்த இனத்திலும் காண முடியாது.


வந்து குவிந்திருந்த நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து சல்லடை போட்டு சிலவற்றை தேர்வு செய்தேன். அவற்றில் மேரியின் அனுபவங்களும் பின்புலமும் நேர்காணலில் அவளின் நேர்மையான அணுகுமுறையும் என்னைக் கவர்ந்ததால் அவளையே இப்பணிக்கு நியமித்தேன்.


என் எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் விதமாக அவளின் சுறுசுறுப்பு, அரவணைப்பான, அக்கறையான பேச்சு, எப்போதுமே மலர்ந்த முகமென அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் அவளைப் பிடித்துவிட்டது.


ஒரு வங்கியின் உயர் பதவியில் பல ஆண்டுகள் பணி புரிந்தவள், விவாகரத்தாகி பிலிப்பைன்சில் சுயமாய் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தவள், வியாபாரத்தில் திடீரென ஏற்பட்ட கடன்களால் மூன்று பிள்ளைகளையும் அவள் வயதான அம்மாவின் பொறுப்பில் விட்டுவிட்டு இங்கிருந்து மாதாமாதம் அவர்கள் கல்விச் செலவிற்குப் பணம் அனுப்புகிறாள்.


"இந்த ஆண்டு என் மூத்த மகள் பட்டதாரியானதும் அவளையும் இங்கு அமீரகத்துக்கு அழைத்து வந்து விடுவேன். எங்கள் ஊரில் வெளிநாட்டு பிலிப்பினோக்களுக்கு தான் மரியாதை அதிகம்" என்று அவ்வப்போது புலம்புவாள்.


இன்று என்னவென்றால் அந்த மகள் கையை அறுத்துக் கொண்டு நிற்கிறாள்.


-----------


இதோ, நேற்றோடு லெபனானிலிருந்து இந்த நாட்டுக்கு வந்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டது. இஸ்ரேலிய குண்டு வீச்சில் இறந்த பெற்றோரையும் மூத்த சகோதரனையும் அடக்கம் செய்து விட்டுத் தனியனாய் நான் நேசித்த பனி மலைகளையும்,  அலைந்து திரிந்த பெய்ரூட் நகரத் தெருக்களையும் விட்டுப் பிரியும் போதுதான் கடைசியாக வாழ்வில் அழுதது. ஆனால் இங்கு வந்த பின்னர் இந்த நிறுவனம் தான் என் உயிரும் உறவுமாகிப் போனது.


மாற்றம் ஒன்றுதானே மானுட வாழ்வின் மகத்தான தத்துவம்? மேரியின் வரவுக்குப் பின்னர் என் வாழ்விலும் மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்தது. பணியில் அவளின் நேர்த்தி, சக ஊழியர்களிடத்து அன்பு, பொறுமை, பரிவு என அவளின் ஒவ்வொரு குணமும் என்னை சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கத் தொடங்கியது.


"என்ன விதமான உணர்வு இது? ஒருவேளை காதலோ? சரிதான், ஐம்பது வயதில் இது தேவையா? ஆனால் காதல் என்றாலே அன்புதானே, அன்புக்கு வயது உண்டா என்ன?"


பல நாட்கள் என்னுடன் நானே புரிந்த விவாதத்திற்குப் பிறகு முடிவு செய்தேன், இனி மீதமுள்ள நாட்கள் நாம் இணைந்து வாழலாமா என அவளிடம் கேட்டு விடலாம் என்று.


-----------------


மாலை பணி முடிந்து கிளம்பும் போது மேரியை அழைத்தேன்.


"இன்றிரவு என்னுடன் டின்னருக்கு வருகிறாயா மேரி?"


"ஓ, நிச்சயம் தாவூத். ஏதேனும் விசேஷமா?"


"ஆம் விசேஷம்தான், இன்றோடு இந்த நாட்டுக்கு வந்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது, அதற்காக ஒரு சிறிய விருந்து"


உலகின் ஒரே ஏழு நட்சத்திர விடுதியின் இருபத்தி ஏழாவது தளத்தில் உள்ள உணவகத்தில் முன்பதிவு செய்திருந்த இருக்கையில் அமர்ந்தோம்.


வெளியே அரபிக் கடலில் விளக்குகளின் வெளிச்சத்தில் ஜூமைரா தீவு கட்டிடக்கலையின் பெருமையைப் பறைசாற்றியபடி அற்புதமாய் மின்னிக் கொண்டிருந்தது.


சிறிது நேரம் எதுவும் பேசாமல் நிசப்தமாய் தொலைவில் நகர்ந்து கொண்டிருந்த கப்பலைப் பார்த்துக் கொண்டே திடீரென நினைவுக்கு வந்தவன் போல்,


"அந்த டெலிகாம் ஆடிட்டிங் ஃபைலை க்ளையண்டுக்கு அனுப்பி விட்டாயா மேரி?"


"ஹூம்.. இங்கும் அலுவலக நினைப்பு தானா? நேற்றே அனுப்பி விட்டேன் தாவூத். வேறு ஏதேனும் பேசலாமா?"


அவளே ஆரம்பித்தாள். "ஆமாம், நீங்கள் ஏன் திருமணமே செய்து கொள்ளவில்லை?"


எப்படித் துவங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தால் இப்படி நேரடியாகத் தாக்குகிறாளே.


சட்டென்று பதிலளித்தேன் "உன் போன்ற ஒரு பெண்ணை இருபது ஆண்டுகள் முன்னர் சந்தித்திருந்தால் நிச்சயம் திருமணம் செய்திருப்பேன்"


"ஹா, ஹா உலகின் அழகான பெண்கள் எல்லாம் லெபனானில்தான் பிறக்கிறார்கள், நீங்கள் என்னவென்றால் ஒரு சப்பை முகம் கொண்ட பிலிப்பினோவை திருமணம் செய்து கொண்டிருப்பேன் என்கிறீர்களே?"


"ஒரு வேளை அந்த வயதில் உடல் அழகை மட்டும்தான் விரும்பியிருப்பேனோ என்னவோ? ஆனால் இப்போது உன் உள்ளத்தையும் அதிலுள்ள எல்லையற்ற அன்பை மட்டும்தான் காதலிக்கிறேன் மேரி"


ஒரு நிமிடம் துணுக்குற்றாள். "என்ன சொல்கிறீர்கள் தாவூத்?"


"நிஜம்தான் மேரி, நான் உன்னைக் காதலிக்கத் துவங்கிவிட்டேன் என்று எண்ணுகிறேன். நாம் ஏன் வாழ்வின் மீதமுள்ள நாட்களை ஒன்றாய் கழிக்கக் கூடாது?"


"ஆனால் தாவூத்... நான வயதானவள் மூன்று வயது வந்த குழந்தைகளின் தாய். இதெல்லாம் சாத்தியமா என்று தெரியவில்லை" அவள் குரலில் லேசான நடுக்கம் தெரிந்தது.


"இதில் தவறொன்றும் இருப்பதாய் தெரியவில்லை மேரி, நானும் வயதானவன் தானே? முதுமையில் நாம் இருவரும் ஏன் துணையின்றித் தனிமையில் உழல வேண்டும்? உன்னைப் பற்றி எனக்கு முழுமையாய் தெரியும். அத்துடன் உன் பிள்ளைகளுக்கும் ஒரு நல்ல தகப்பனாய் இருப்பேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது"


"நான் சற்று யோசிக்க வேண்டும்.... நாளை காலை என் முடிவை சொல்கிறேனே தாவூத்?"


"ஒன்றும் அவசரமில்லை மேரி, பொறுமையாய் சிந்தித்து ஒரு நல்ல முடிவு எடுப்பாய் என்று நம்புகிறேன்"


வீடு திரும்பும்போது காரில் எதுவும் பேசாமல் தீவிரமான யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.


"உன் வீடு வந்துவிட்டது மேரி" இறங்கிச் சென்று அவள் புறமிருந்த கதவைத்திறந்து சொன்னேன்.


டிசம்பர் மாதக் குளிர்காற்று உடலெங்கும் ஊசி போல் குத்தியது. இந்தப் பாலையில் இப்படித்தான், கோடைக் காலங்களில் சூரியனின் வெப்பம் உடலை எரிக்கும். குளிர்காலங்களில் உடல் விறைக்குமளவு நடுங்கும்.


"ம்..ம்ம்.." சுய உணர்வுக்கு வந்தவளாய் மெலிதாய்ப் புன்னகைத்துக் கொண்டே கீழிறங்கினாள்.


அவள் முகத்தில் ஏதோ தெளிவு பிறந்தது போலிருந்தது. "எனக்கு சம்மதம் தாவூத், ஆனால் என் அம்மாவிடமும் மூத்த மகளிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறேன். நிச்சயம் இருவரும் மகிழ்வார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் அவர்கள்தான் நான் எவ்வளவு மறுத்தாலும் அடிக்கடி மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவர். என் பிள்ளைகள் என்னைவிட அன்பும் பொறுப்பும் நிறைந்தவர்கள். உங்களை அவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்"


"குட் நைட் தாவூத்"  புறங்கையில் ஒரு ஈர முத்தத்தைப் பதித்து விடை பெற்றாள் மேரி.


உயர்திணைகள், அஃறிணைகள் என அருகிலிருந்த அனைத்தும் அழகாய் இருந்த அந்த இரவு விடியவே கூடாதா என பைத்தியகாரத்தனமாய் எண்ணியது மனம்.


-----------------------


விடியலில் ஜன்னலுக்கு வெளியே சிரித்த சூரியன் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது போலிருந்தது. உற்சாகமாய் அலுவலகம் கிளம்பினேன்.


என் அறைக்குள் நுழைந்ததும் எனக்காகவே காத்திருந்தது போல் அழைப்பு மணியடித்தது.


"யெஸ் கம் இன்"


"ஒரு வாரம் விடுப்பு வேண்டும் தாவூத், மணிலா செல்ல வேண்டும்" அறையினுள் நுழைந்த மேரியின் கலங்கிய கண்களை நோக்கியதுமே எனக்குள்ளும் ஏதோ கலங்கியது.

----------------


இன்றோடு அவளைப் பிரிந்து ஒரு வாரம் ஆயிற்று. அவளிடமிருந்து எந்த விதமான தகவலும் இல்லை. அலைபேசியில் அழைத்தால் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாய் திரும்பத் திரும்ப சொல்லிற்று.


வாழ்வில் முதல் முறையாக அவளில்லாத கணங்களில் தனிமையின் கொடூரம் தாக்கத் துவங்கியது. ஹூம் அவளும் கணவனின் பிரிவுக்குப் பின்னர் இப்படித்தானே தவித்திருப்பாள்? இனி எதற்கும் கலங்காத வண்ணம் அவளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டே மின்னஞ்சலை திறந்த போது இன்ப அதிர்ச்சி, மேரி ஏதோ செய்தி அனுப்பியிருக்கிறாள். உள்ளமெங்கும் பொங்கிய உற்சாகத்தோடு அதனை திறந்தேன்.


"அன்புள்ள தாவூத்,


இவ்வளவு நாட்கள் உங்களைத் தொடர்பு கொள்ளாமல் இருந்தமைக்கு மன்னிக்கவும். மணிலாவுக்கு வந்த தினத்திலிருந்தே இங்கு நடக்கும் பல நிகழ்வுகளில் எனக்கு மகிழ்வு இல்லை. இந்த ஓராண்டில் என் பிள்ளைகளைப் பிரிந்து வெகு தொலைவு வந்து விட்டதாய் உணர்கிறேன். பணம் மட்டும் தானா வாழ்க்கை? அதற்காக ஏன் என் செல்லங்களைப் பிரிய வேண்டும்? ஒரு வேளை நான் உடன் இருந்திருந்தால் என் மகள் இப்படித் தவறான முடிவு எடுத்திருக்க மாட்டாளோ?


இனி வரும் நாட்களை அவர்களுக்காகவே கழிப்பதாய் முடிவு செய்து விட்டேன். உலகம் மிகவும் சிறியது தாவூத். என்றேனும் ஒரு நாள் அவர்களுக்கு நான் பாரமாய் மாறியதாய் உணர்ந்தால் நிச்சயம் உங்களைத் தேடி வருவேன். அப்போதும் என்னை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்,


-மேரி"


எவ்வளவு முயன்றும் விழிகளில் ஈரம் படர்வதை தவிர்க்க இயலவில்லை. ஏனோ லெபனானின் பனி மலைகளும், பெய்ரூட்டின் தெருக்களும் மீண்டும் நினைவுக்கு வந்தன.


--------------------


I am forever walking upon these shores,
Between the sand and the foam,
The high tide will erase my foot-prints, 
And the wind will blow away the foam. 
But the sea and the shore will remain Forever.
-Khalil Gibran

Tuesday, November 3, 2009

நடனங்கள் - வாழ்வின் கொண்டாட்டம்








இசை மற்றும் நடனங்களின் தீவிர ரசிகனாயிருந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் இயல்பாய் உடனிருந்த கூச்ச சுபாவமும் தாழ்வு மனப்பான்மையும் ஒரு பார்வையாளன் அளவிலேயே என்னை நிறுத்தி விட்டது. ஆனால் இந்த மென்பொருள் வாழ்க்கை என் பல பழக்க வழக்கங்களைப் புரட்டிப்போட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும்.

எங்கள் ஊரில் திருவிழாக்களில் தீர்த்தம் எடுக்கும் போது, உள்ளூர் ஜிக்காட்டக் குழுவினரின் பறையடிக்கேற்ற நடனத்திற்கு பார்வையாளர்களின் உடலும் கட்டுப்பாடிழந்து தானாய் ஆடும். அதே போன்ற ஒரு உணர்வைக் கொடுத்து என்னை ஆட வைத்தன மும்பையின் நடன விடுதிகள்.

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மட்டும் எந்தப் ப்ராஜெக்டில் எங்கிருந்தாலும் மாலை எட்டு மணிக்குள் கிழக்கு அந்தேரியிலுள்ள எங்கள் அலுவலக கெஸ்ட் ஹவுசில் அனைவரும் கூடி விடுவர். ஆளுக்கொரு வேலையாய் பிரித்துக் கொண்டு சைட் டிஷ் வாங்கி வர ஒரு குழுவும், சரக்கு வாங்க ஒரு குழுவும் செல்ல, வீட்டை சுத்தப் படுத்தி ஹாலில் பிட்ச் போட்டு ஒன்பது மணியளவில் ஆட்டம் துவங்கி விடும்.

ஒவ்வொருவரும் அவனவன் மேனேஜரைத் திட்டிவிட்டு நிறுவனத்தையும் மாறி மாறித் திட்ட ஆரம்பிப்பார்கள்.

"மச்சான் நம்ம கம்பெனியில ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்டே சரியில்லடா, இந்த இஷ்யூவ எப்படி ஹேண்டில் பண்ணனும் தெரியுமா?" என்று மப்பில் அவனவன் கொடுக்கும் ஐடியாவை மட்டும் நிர்வாகம் கேட்டால் நிறுவனம் ஒரே நாளில் 'Fortune 100'க்குள் வந்து விடுமென்று தோன்றும்.

"சரி சரி விடுங்கடா, இவனுங்க திருந்தவே மாட்டனுக. வேற ஏதாவது பேசுங்கடா"

"இந்த டெஸ்டிங் டீம்ல இருகுக்கற ப்ரியா படுத்தறாடா, என்னால தூங்கவே முடியல"

"ஏண்டா ஏதாவது பத்திகிச்சா?"

"ஆமாண்டா, பத்திகிட்டு எரியுது. நீவேற, தினமும் ஏதாவது புதுசு புதுசா பக் கண்டு புடிச்சு என்ன வாதிக்கறாடா. ஒண்ணு மட்டும் சொல்றண்டா மச்சி, எவ்வளோ சம்பளம் வாங்குனாலும் சத்தியமா டெஸ்டிங்குல இருக்கற பொண்ண மட்டும் கட்டிக்கவே மாட்டேன்"

பேச்சு திசை மாறி எங்கெங்கோ சுற்றி விட்டு டான்ஸ் பார் போலாமாடா? என்று வந்து நிற்கும்.

அனைவரின் பேராதரவோடு பனிரெண்டு மணியளவில் ஒரு சிலர் மட்டையாகிவிட, மீதமுள்ளவர்கள் ஆளாளுக்கு ஒரு டான்ஸ் பார் பெயரைச் சொல்ல, 6 -7 பேரை ஏற்றிக் கொண்டு இரண்டு ஆட்டோக்கள் கிளம்பும்.

பெரும்பாலானவற்றில் உள்ளே இடமின்றி பவுன்சர்களால் விரட்டியடிக்கப் பட்டு நொந்து போய் வீடு திரும்பலாமென எண்ணும்போது ஏதேனும் ஒரு மொக்கை ஃபிகர்கள் உள்ள டான்ஸ் பாரில் இடம் கிடைக்கும். வெறும் நான்கு பியர்களை மட்டும் வாங்கிக் கொண்டு, அரையிருட்டில் உச்சபட்ச ஒலியில் இந்திப் பாடல்களுக்கு நம்ம ஊர் குத்தாட்ட நடனம் ஆட ஆரம்பிப்போம். சரக்கடித்த பின்பு வெட்கமாவது கூச்சமாவது?


பவுன்சர்கள் அவ்வப்போது வந்து "ஔர் குச் சாயியே" என்று கழுத்தைப் பிடிப்பது போல் கேட்டாலும் சரி, ஃபிகர்கள் "கம்பெனி சாயியே?" என்று கேட்டாலும் சரி, எதற்கும் மசியாமல் அவை பின்னால் "தூத்தேறி" என்று துப்புவது காதில் விழுந்தாலும் ஆட்டம் நிற்காது.

அதிகாலை நான்கரை, ஐந்து மணிவரை ஆடிக் களைத்து "கடைய சாத்தறோம் கெளம்புங்கடா" என்று பவுன்சர்கள் விரட்டிய பின்னர்தான் வெளியே வருவோம்.

மாதக் கடைசியில் எவனாவது மன வருத்தத்தில் இருந்தால், ஹாலிலேயே இரண்டு மூன்று பெக்குகளுடன் ஏதேனும் குத்துப்பாடல் டிவிடியில் ஓட, எங்கள் நடனம் ஆரம்பமாகி விடும்.

ஆனால் மும்பைக்குப் பின்னர் அதே போன்று வேறு எங்கும் நடனமாடும் வாய்ப்பும் நண்பர்கள் குழுவும் ஏனோ அமையவில்லை. சில வருடங்களுக்குப் பின்னர் சிங்கையில் இருந்த போது மீண்டும் அதே போல் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை, ஆனால் இம்முறை

"அண்ணனுக்கு ஜே..,
 காளையனுக்கு ஜே..
பொதுவாக எம்மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்துபுட்டா சிங்கம்"

என்று தமிழ்ப் பாடலை அசோகா நடன விடுதியில் கேட்டவுடன், உற்சாகம் பிய்த்துக் கொண்டு உடலும் உள்ளமும் ஆடத்துவங்கியது. ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அங்கு பலர் குடும்பத்துடன் வந்து ஆடிக்கொண்டிருந்தனர்.

எல்லாம் சரி, இப்போதெல்லாம் நம் ஊரில் பல குழந்தைகள் தொலைக்காட்சியில் குத்துப் பாடல்களைக் கேட்டவுடன் ஆட ஆரம்பித்து விடுகின்றனவாம்.

நண்பர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது புலம்பினார், அவரின்  இரண்டரை வயதுப் பெண், குழந்தைகளின் காவியமான கந்தசாமியில் வரும் "ஏம்பேரு.. மீனாகுமாரி" என்ற பாடலைக் கேட்டால் எந்த இடமாக இருப்பினும் நின்று ஆட ஆரம்பித்து விடுகிறாளாம்.

"இதுக்கெல்லாம் கவலப் படுறீங்களே, நானெல்லாம் இருபத்தஞ்சு வயசுக்குப் பின்னாடிதான ஆடவே ஆரம்பிச்சேன். உங்க பொண்ணு இப்பவே டான்ஸ்ல பின்னறாளே?"

"அதில்லைங்க, வேற ஏதாவது பாட்டா இருந்தாப் பரவாயில்லை, ஆனா அதுல வர்ற மாதிரியே ஆடுறா, அதுதான் பிரச்சினை" என்றார்.

ஹூம்.. குழந்தைகளுக்குத் தெரியுமா எது நல்லது கெட்டது என்று? இசையும் நடனமும் இணைந்து வாழ்வைக் கொண்டாடும் வயது அல்லவா அது?

இங்கே நம் ஊரில்தான் இப்படியா என்றால், இந்த சாம்பா நடன அழகியின் குஜால் ஆட்டத்தைப் பாருங்கள் எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கிறதென்று.



பிஞ்சுகளே இந்த ஆட்டம் ஆடும் போது உங்களுக்கும் நடனமாட வேண்டும் போலிருக்கிறதா? கூச்சப் படாதீர்கள். வீட்டில் யாருமில்லையென்றால் கதவை மூடிவிட்டு உங்களுக்குப் பிடித்த பாடலைப் போட்டு ஆரம்பியுங்களேன். கலைகளுக்கும் கொண்டாட்டத்துக்கும் வயது ஒரு தடையா என்ன?


Monday, November 2, 2009

சில அதிர்ச்சிகளும் பல ஆச்சரியங்களும்



அடுத்த வினாடியில் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் ஏராளம் என்றாலும் வாழ்க்கை எவ்வித எதிர்பார்ப்புமின்றி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆயினும் அவ்வப்போது நினைவுகளில் இளைப்பாறும் பொழுது, சற்றுப் பின் நோக்கினால் அந்த ஆச்சரியங்கள் எப்பொழுதும் மகிழ்வையும், அதிர்ச்சிகள் பல அனுபவங்களையுமே கற்றுக் கொடுத்துள்ளன.

நினைவில் தெரிந்த முதல் வியப்பு எங்கள் வீட்டுக் கோழி இடும் முட்டைகளும் அது பொரிக்கும் குஞ்சுகளும். ஒவ்வொரு முறை அது அடை காக்கும் போதும் முட்டையை உடைத்துக் கொண்டு குஞ்சுகள் வெளிவருவதைக் காணும் ஆவலில் தினமும் மாலை பள்ளியில் இருந்து வந்து கூடையைத் திறந்து பார்ப்பேன்.

எப்போதும் என்னிடம் அன்பாக இருக்கும் தாய்க்கோழி, குஞ்சுகள் பிறந்த அன்று அனைத்தையும் தன் இறகுகளுக்குள் ஒளித்துக் கொண்டு என்னை முறைத்துப் பார்க்கும். குறைந்தது நான்கு ஐந்து நாட்கள் யாரையும் அதனிடம் நெருங்கவே விடாது.

 சில தினங்களில் அவை அனைத்தும் என் காலடியில் சுற்ற ஆரம்பித்ததும் பஞ்சு போல் மென்மையான கோழிக் குஞ்சுகளை இரண்டு கைகளுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்து நேரம் போவதே தெரியாமல் விளையாடிக் கொண்டிருப்பேன்.

வெளியே மேயச் சென்றாலும் அவை வீட்டிலிருந்து வெகு தூரம் செல்லாது. பின்னால் உள்ள சோளக்காடுதான் அதிகபட்ச தொலைவு. அம்மா சற்று உரக்கக் கூவினால் எங்கிருந்தாலும் வீட்டு முற்றத்துக்கு அனைத்தும் ஓடோடி வந்து விடும். மாலை ஆறு மணியானால் வெளியே தொட்டியில் உள்ள நீரைப் பருகிவிட்டு தானாகச் சென்று கூட்டில் அடைந்து விடும்.

ஒரு கோடை விடுமுறை நாளில் மதியம் பனிரெண்டு மணியளவில் மிகவும் தளர்ந்து நடந்து வந்தது தாய்க்கோழி. வழியிலேயே இரண்டு குஞ்சுகள் நடக்க முடியாமல் கீழே விழுந்து மரித்தன. உடனிருந்த சில குஞ்சுகளையும் காணவில்லை.  தாய்க்கோழி வேதனையுடன் எங்களைப் பார்த்துக் கொண்டே வாயைத் திறந்தபடி மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்தது.

அம்மா அதனை மடியில் வைத்து ஒரு கிண்ணத்திலிருந்த தண்ணீரைப் புகட்ட முயற்சித்தார், ஆனால் எல்லா நீரும் வெளியே வடிந்தது. சில நிமிடங்களில் அம்மாவின் மடியிலேயே நூற்றுக்கணக்கான குஞ்சுகளைப் பெற்ற அந்த தாய்க்கோழியின் துடிப்பு அடங்கியது.

மருந்து அடித்திருந்த விதை சோளங்களைத் தின்று ஒட்டுமொத்தமாய் எங்களை விட்டு அந்தக் குடும்பம் பிரிந்ததுதான் என் நினைவில் தெரிந்த முதல் அதிர்ச்சி, துயரம், இழப்பு.

அதன் பின்னர் ஒவ்வொரு கால கட்டங்களிலும் வியந்த, அதிர்ந்த நிகழ்வுகள் பலப்பல.

பள்ளி நாட்களில் ஆசிரியர்களால் பாராட்டப்படும் போது ஏற்படும் மகிழ்வு, காரணமே இல்லாமல் வெறுத்து ஒதுக்கிய சில ஆசிரியர்களால ஏற்படும் அதிர்ச்சிகள்.

படிப்பு மற்றும் விளையாட்டில் செய்த சிறு சிறு சாதனைகளுக்கு நண்பர்கள், உறவினர்களின் பாராட்டுக்கள், பரிசுகள்.

பதின்ம வயதுகளில் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள், குரல் உடைந்து, மீசை முளைத்து, சம வயதொத்த பெண்களை நோக்கும்போது ஏற்பட்ட கிளர்ச்சிகள்.

பள்ளியில் அனைவருக்கும் பிடித்த பரிமளா டீச்சரின் தற்கொலை, தாத்தா, பாட்டி, பெரியப்பா மற்றும் ஒன்று விட்ட அண்ணன் ஆகியோரின் இழப்பு.

கல்லூரி நாட்களில் எங்கிருந்தோ வந்து எதனாலோ என்னைப் பிடித்து இன்று வரை தொடரும் நண்பர்களின் அன்பு, நட்பு.

பணியில் சேர்ந்த முதல் மாத சம்பளம், அதன் நினைவாய் வாங்கிய பொருள். என் உழைப்பில் வாங்கிய ஸ்ப்ளெண்டரை, சென்னை மாநகரத் தெருக்களில் ஓட்டிச் சென்ற நாள்.

இவை அனைத்தும் என் தனிப்பட்ட வாழ்வின் சில நிகழ்வுகள் எனினும் இதே காலங்களில் நிகழ்ந்த பல்வேறு சமூக நிகழ்வுகளின் தாக்கங்கள் ஏற்படுத்திய வியப்புகளும், வலிகளும் வேதனைகளும் என ஒவ்வொரு நாளும் வாழ்க்கை அதன் பாடங்களை கற்பித்துக் கொண்டே இருக்கிறது.

உலகின் உயரத்தில் நான் மட்டும் இருப்பது போன்றே கூனிக்குறுகி ஒரு இருண்ட குகையிலும் இருப்பதாய் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். பணி நிமித்தமாய் பல நகரங்களில் தனியனாய் உழன்ற போது அந்த இருண்ட குகையின் வெளிச்சமாய் வந்தது இணையமும், தமிழ் வலைப்பதிவுகளும்.

அதுவரை முகமறியா நட்பில் ஒரு போதும் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. ஆனால் இன்று இணைய நண்பர்களால் நிகழ்ந்த பல வாழ்வியல் மாற்றங்கள் என்னை வாழ்வின் அடுத்த தளத்திற்கு நகர்த்தியுள்ளதை நிச்சயம் மறுக்க முடியாது.


உறங்க நேரமில்லாக் கடும் பணிச்சுமையின் இடையே கிடைத்த மற்றுமொரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தமிழ்மணத்தின் இந்த அங்கீகாரம்.


ஒரு வாசகனாய் இருந்தபோது கிடைத்த அனுபவங்களும் ஆச்சரியங்களும் ஏனோ எழுதத் துவங்கிய பின்னர் கிட்டவில்லை. இருப்பினும் இதோ மீண்டும் ஒருமுறை வாழ்வின் இருண்ட குகையிலிருந்து உலகின் உயரத்திற்கு மனம் செல்கிறது, உங்களின் அன்பையும் ஆதரவையும் நட்பையும் எதிர்நோக்கி.

Saturday, September 19, 2009

KFC - கொக்கரக்கோ கும்மாங்கோ





கடந்த வாரம் ஒரு நாள் காலை வீட்டில் அவசரத்தில் குதறிய இரண்டு தோசைகளுடன் மதிய உணவை மறந்து அலுவலகத்தில் பொட்டி தட்டிக் கொண்டிருந்தேன். மூன்று மணியளவில் லேசாகக் கிள்ள ஆரம்பித்த பசி நான்கு - ஐந்து மணியளவில் வயிற்றில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு வீடு வந்த போது மணி ஆறு.

குப்பை உணவு (Junk Food) தின்று நீண்ட நாட்களாகி விட்டபடியால் அருகிலிருந்த KFC (Kentaucky Fried Chicken)க்கு வெளியே காத்திருக்க ஆரம்பித்தேன் (நோன்பு காலமாகையால் இங்கு ஆறரை மணிக்கு முன்பு எந்தக் கடையும் திறக்க மாட்டார்கள்). சிறிது நேரத்தில் என்னோடு பத்து பதினைந்து பிலிப்பைன்ஸ் நாட்டவரும் இணைந்து கொண்டனர். 'Tagalog'ல் ஏதோ பேசிக் கொண்டிருந்த அவர்கள், கடை திறந்ததும் 'ஓ' வென மகிழ்ச்சியில் பெரும் கூச்சல் எழுப்பிக் கொண்டு உள்ளே நுழைந்து வரிசையில் முன்பு நின்று கொண்டனர்.

கடும் பசியில் முதலில் வந்து கடைசியில் வரிசையில் நின்ற போது ஏனோ எங்கள் பள்ளியில் புதன்கிழமை முட்டையுடன் போடும் சத்துணவுக்காக வரிசையில் அடித்துப் பிடித்து நின்றதெல்லாம் நினைவில் வந்து தொலைத்தது.

ஒரு வழியாக என் முறை வந்த போது அங்கிருந்த 'Finger Lickin' ஐட்டங்களில் ஒன்றான 'Zinger Meal'ஐ உள்ளே தள்ளிய பின்தான் சற்று உயிர் வந்தது.

என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் 'Junk Food'ன் ருசியே தனிதான். அதனால்தானோ என்னவோ குழந்தைகளுக்கு இவற்றின் மேல் அலாதிப் பிரியம் போலும்.

சரி சரித்திரத்துக்கு வருவோம். KFC நம்ம லாலேட்டன் போல் அமெரிக்க ராணுவத்தில் கர்னலாக இருந்த திரு 'ஹார்லேண்ட் சாண்டர்ஸ்' என்பவரால் தொடங்கப்பட்டு இன்று உலகமெங்கும் கிளை பரப்பி நிற்கிறது.

இந்த கையை நக்க வைக்கும் (Finger Lickin) வறுகோழி, பதினொரு மூலிகைகள் மற்றும் பல மசாலாக்களின் கலவையால் செய்யப்பட்டது (அப்படித்தான் சொல்றாங்கோ).

இதன் செய்முறை, அந்த மசாலாக்களின் அளவு, பதினொரு மூலிகைகளின் பெயர் ஆகியவைதான் KFCன் வியாபார ரகசியம்.

அந்த விபரங்கள் பென்சிலால் ஒரு பேப்பரில் எழுதி சாண்டர்ஸால் கையொப்பம் இடப்பட்டு, சிறு குப்பிகளில் அடைக்கப் பட்ட அந்த பதினொரு மூலிகைகளுடன் ஒரு ரகசிய கேபினெட்டில் கணினிப் பூட்டால்(Computerized Lock) பூட்டி வைத்திருக்கிறார்கள்.

அதன் கடவுச்சொல்KFCல் உள்ள இருவரிடம் மட்டும்தான் இருக்கும், பாதி வார்த்தை ஒருவரிடம் மீதி வார்த்தை மற்றொருவரிடம். ஆனால் அந்த இருவர் யாரென்ற விபரம் வெளியாள் ஒருவருக்கும் தெரியாது.

இதெல்லாம் உங்களுக்கு நக்கலாத் தெரிஞ்சா, விக்கிபீடியாலயே போய் இங்க சரி பாத்துக்கோங்க.

எல்லாம் சரி, இந்த ராணுவ ரகசியமெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்களா? கென்டகி வறுகோழியைப் புசித்து விட்டு கடையில் வெட்டியாக அமர்ந்து அரட்டையடிக்க கூச்சமாக இருந்த யாரோ ஒருவரின் Creativityயை நேற்று பார்த்தேன் அதனால்தான். நீங்களும் வீட்டில் சிக்கன் தின்று விட்டு சும்மா இருந்தால் கீழே உள்ள தலைவர்களை செய்து பாருங்களேன்.


வீர தளபதி


இளைய தளபதி


புரட்சி தளபதி


சின்ன தளபதி

Saturday, September 5, 2009

கடந்த மாதம்..


எட்டு மாதங்களாக இழுத்துக் கொண்டிருந்த Projectஐ ஒரு வழியாய் முடித்து 'Sign Off' வாங்கி இரண்டு நாட்கள் முன்னர்தான் பஹ்ரைனிலிருந்து ஊர் திரும்பினேன். ஆனால் மழை விட்டும் தொடரும் தூவானம் போல இங்கு வந்த பின்னரும் ஏகப்பட்ட பிரச்சினைகள். மீண்டும் இங்கிருந்து VPN மூலம் ஒவ்வொன்றுக்கும் தீர்வு கொடுத்து மக்களை சமாதானப் படுத்துவதற்குள் போதும் போது என்றாகிவிட்டது.

அமெரிக்காவின் மிகப்பெரும் எக்ஸ்பிரஸ் வங்கி என்றுதான் பெயர், ஆனால் மத்திய கிழக்கு நாடுகளின் 'Regional Attitude'ஆல் இங்குள்ள வெள்ளையர்களும் சோம்பேறிகளாகி, பொறுப்புகளைத் தட்டிக்கழித்து, கிடைத்தவன் மேல் குற்றம் சாட்டி, அப்பப்பா, இந்த மென்பொருள் துறையில் பணிபுரிந்தால் இன்னும் 4-5 வருடங்களில் கிழவனாகி விடுவேனென்று எண்ணுகிறேன்.


கடந்த ஒரு மாதமாகப் பல நிகழ்வுகள், வலையுலகிலும் - வெளியுலகிலும். ஆனால் 'Cast Away Tom Hanks' போன்று ஏதோ மனித நடமாட்டமில்லாத தீவிலிருந்தது போலே என் வாழ்வும் தினமும் வெறும் 4-5 மணி நேரத் தூக்கத்துடன் Planning, Presentation, Conference, Bug Fixing என்று ஓடிக்கொண்டே இருந்ததால் வலையுலக நண்பர்கள் உட்பட பலரிடம் சரியாக உரையாட, மின்னஞ்சல் செய்ய இயலவில்லை. அவ்வாறு நான் இழந்த சில நிகழ்வுகள், நட்புகள் பற்றி ஒரு சிறு விளக்கமும், மன்னிப்பும் கீழே.


1) நண்பர் ப்ரபாகரின் வாழ்வில் மற்றுமொரு மகிழ்வான தருணம் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நிகழ்ந்தது. அவரை வாழ்த்தலாமென்று Meetingன் நடுவே கிடைத்த இடைவெளியில் அலைபேசியில் அழைத்தால், அது 'Switch Off' செய்யப் பட்டிருந்தது. அதன் பிறகு இன்று வரை அவரிடம் பேசும் வாய்ப்பு கிட்டவில்லை. அவருக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கும் பதிலில்லை. ஒரு வேளை இதைப் படித்தால், என்னை மன்னியுங்கள் ப்ரபாகர்.

2) மற்றொரு பெரிய வருத்தம் - அமீரகத்தில் அண்ணாச்சி தலைமையில் நடந்த இஃப்தார் விருந்தில் பங்கு பெறும் வாய்ப்பை இழந்தது. நண்பர்களின் பதிவுகளையும் புகைப்படங்களையும் பார்த்து ஆதங்கப் படத்தான் முடிந்தது. ஆரோக்கியமான விவாதங்களுடன் தொடரும் அமீரகப் பதிவர் வலைக் குழுவில் வரும் பல இடுகைகள் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது - தொடருங்கள் நண்பர்களே.

3) நண்பர், அன்பர், பதிவர், எல்லாவற்றுக்கும் மேல் நல்ல மனிதர், 'ஜோ ஆனந்த்' வெற்றிகரமாக சதமடித்து விட்டார். அத்தோடு சரக்கையும் விட்டுவிட்டார் என்று அறிந்ததும் இன்பமும் துன்பமும் சரி சமமாய் என் உள்ளத்தில் குடிகொண்டது. நூறுக்கு வாழ்த்துக்கள் ஜோ - Life Goes On...


4) நண்பர், அண்ணன், ஈரோடு கதிர் - கடந்த ஓராண்டாக மனதைப் பிசைந்த அவரின் பல மௌனங்கள் கசிந்திருந்தாலும் கடந்த ஒரு மாதமாகத்தான் அவரின் வலைப்பூ நன்கு பிரபலமாகியுள்ளது. அவருக்கும் எனது வாழ்த்துக்கள். இதே போன்று மேலும் தரமான படைப்புகளை அண்ணன் தொடர்ந்து தர வேண்டுமென்பது என் அன்பான வேண்டுகோள்.


5) அன்பர் 'தேவியர் இல்லம், திருப்பூர்' ஜோதிஜி - வலைப்பதிவுகள் மூலம் பெற்ற வெகு சில நல்ல நண்பர்கள், மனிதர்களில் ஒருவர். இவரின் வாசிப்பனுபவமும், தேர்ந்த எழுத்து நடையும், திட்டமிட்ட வாழ்க்கை முறையும் என்னப் பல முறை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. 'அது ஒரு கனாக்காலம்' சுந்தர் அவர்களால் அறிமுகப் படுத்தப்பட்டு, பின்னூட்டங்கள், மின்னஞ்சல்களில் தொடர்ந்த விவாதங்களால் நான் கற்றுக்கொண்டவை ஏராளம். இடையில் பல முறை நீங்கள் என்னைத் தொடர்பு கொள்ள முயன்றபோதும் சரியாக உங்களிடம் உரையாட இயலவில்லை. இனித் தொடர்ந்து தொடர்பிலிருக்க முயல்கிறேன், நீங்கள் இன்னும் நிறைய ரகசியங்களைத் தொடருங்கள் சார்.


6) நண்பர் செந்தில்வேலன் - அரை சதம் அடித்துவிட்ட இவரிடம் விகடன் நிறுவனமே, 'முதலில் உங்கள் இடுகைகளை எங்களுக்கு அனுப்பிவிட்டு உங்கள் வலைப்பூவில் பதிவிடுங்கள்' என்று அன்புக்கட்டளை இட்டதை அறிந்து ஒரே ஊர்க்காரன், நெருங்கிய நண்பன் என்ற முறையில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். தொடரட்டும் உங்கள் வலைச் சமூக சேவை.

தொடர்ந்து பின்னூட்டங்கள் மற்றும் விமர்சனங்களால் என்னை ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள். இனி வாரம் ஒரு இடுகையாவது எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். பார்க்கலாம், காலம் என்ன எண்ணுகிறதென்று.

-நாகா
05/09/2009

Sunday, August 9, 2009

தொலைந்த இரவுகளில்..



நினைவுகளால்
தனித்து
விடப்பட்டதென்
கனவு

தொலைந்த இரவுகளில்
துணையின்றித்
தேடிய
விடியலும்

அலைந்து திரிந்த
கால்களை
அணைத்துக்
கிழித்த முட்களும்

விரிந்த சிறகுகளை
முடக்கிய
வீட்டுக்
கூரையும்

உடைந்த அகத்தின்
உவகை
முகமும்

கலைந்த கூந்தலாய்
கருகிய
கால வெளியில்

கடை விரித்துக்
காத்திருக்கிறேன்
கனவுகள் -
விற்பனைக்கு

விடை இல்லை
விலைமகளா
நான் என்றால்...?

எரிமலையும் மனக்குமுறலும்

ஐஸ்லாந்து எரிமலையின் புண்ணியத்தால், தேதி கூடத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த நாட்களின் நடுவில் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் ஓய்வு. நேற்றைய...